லாலுவை வடை 'சாப்பிட' கூப்பிடும் சேனா!
மும்பை: சிவசேனா கட்சியினர் அமைக்கும் வடை கடைகளுக்கு மகாராஷ்டிர ரயில் நிலையங்களில் லாலு பிரசாத் யாதவ் அனுமதி தர வேண்டும். அவர் வடை சாப்பிட விரும்பினால் தாராளமாக வந்து சாப்பிடலாம் என்று சிவசேனா கூறியுள்ளது.
இதுகுறித்து சிவசேனாவின் சாம்னா இதழில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
நானும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவன்தான். எனக்கும் சொந்தமானதுதான் மகாராஷ்டிரா என்கிறார் லாலு பிரசாத் யாதவ். இது எப்படி இருக்கிறது என்றால், எல்லாமே என்னுடையதுதான். மற்றவர்களுக்குச் சொந்தமானதும் கூட எனக்குச் சொந்தமானதுதான் என்பது போல இருக்கிறது.
மலைப் பாம்பைப் போல ரயில்வேயை இறுக்கப் பிடித்து வைத்துள்ளார் லாலு பிரசாத். இதனால் மராத்தியர்களுக்கும், மகாராஷ்டிரர்களுக்கும் ரயில்வேயில் சமீப காலமாக வேலையே கிடைக்கவில்லை.
சிவசேனா தொடங்கியது முதலே அனைத்துத் துறைகளிலும் மராத்தியர்கள் இடம் பிடிக்க வேண்டும். தங்களது பலத்தையோ அல்லது அறிவையோ பயன்படுத்தி இதை சாதிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
ஏன், கள்ளச் சாராய வியாபாரிகள், தாதாக்களும் கூட மராத்தியர்களாகவே இருக்க வேண்டும் எனவும் கூட நாங்கள் கூறி வந்துள்ளோம்.
ரயில் நிலையங்களில் சிவசேனா கட்சியினர் நடத்தும் வடை கடைக்கு (சிவ் வடா பாவ்) லாலு பிரசாத் அனுமதி தர வேண்டும்.
ஒரே ஒரு டேபிளை போட்டுக் கொள்ள இடம் கொடுத்தால் கூட போதும். இதன் மூலம் 5000 மராத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
சிவசேனா வடை கடை:
மேலும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வடை வகைகளை வேறு மாநிலத்தவர்களைச் சேர்ந்தவர்கள் தயாரித்தால் சரியாக இருக்காது. எனவே மராத்தியர்கள்தான், மகாராஷ்டிர வடைகளை தயாரிக்க வேண்டும்.
இதேபோல குஜராத்தில் விசேஷமான டோக்லா, தென்னிந்தியாவில் பிரபலமான இட்லி- சாம்பார் ஆகியவற்றை உள்ளூர்க்காரர்களைக் கொண்டு தயாரித்து ரயில் நிலையங்களில் விற்க ஏற்பாடு செய்யலாம்.
லாலு மகாராஷ்டிர வடை சாப்பிட விரும்பினால், மும்பை சிவாஜி பார்க்கில் ஏற்பாடு செய்ய்படும் சிவ வட பாவ் விழாவுக்கு வந்து வேண்டிய அளவுக்கு வடை சாப்பிட்டு விட்டுச் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications