இஸ்ரோவின் அடுத்த இலக்கு செவ்வாய் கிரகம்!
கொச்சி: சந்திராயன் திட்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்து செவ்வாய்க்கும் விண்கலம் அனுப்புவதற்கான முயற்சிகளில் இஸ்ரோ ஈடுபடும் என இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
குருவாயூர் செல்வதற்காக கொச்சி வந்த மாதவன் நாயர் அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், செவ்வாய் கிரக பயணம் தொடர்பான ஆய்வுகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. பூர்வாங்க ஆய்வை முடிக்க நான்கு ஆண்டுகள் ஆகும்.
சந்திராயன் விண்கலத்துடன் இணைத்து அனுப்பப்பட்டிருந்த இரண்டு அமெரிக்க சாதனங்கள் 2 நாட்களுக்கு முன்பு இயக்கி வைக்கப்பட்டன.
அதிலிருந்து பெறப்படும் தகவல்கள் இன்னும் ஒரு வாரத்தில் நமக்கு கிடைக்கும். இன்னும் இரண்டு சாதனங்களை நாம் இயக்க வேண்டியுள்ளது. விரைவில் அவையும் இயக்கி வைக்கப்படும்.
சந்திராயனில் உள்ள மூன் இம்பாக்ட் பிராப், கேமரா, 5 மீட்டர் ரெசலூஷனில் நமக்குப் புகைப்படங்களை அனுப்பியுள்ளது. இவ்வளவு துல்லியமான கேமராவை பயன்படுத்தியிருக்கும் முதல் நாடு நாம்தான். இதற்கு முன்பு ஜப்பானின் 10 மீட்டர் ரெசலூஷன் கேமராதான் சிறந்ததாக இருந்தது.
சந்திராயன் -1 பயணம் முழு வெற்றி அடைந்துள்ளது. அதுதொடர்பான அனைத்து முக்கியப் பணிகளும் முழுமையை அடைந்து வருகின்றன என்றார் நாயர்.












Click it and Unblock the Notifications