ஜாகுவார், லேண்ட் ரோவரை காப்பாற்ற பிரிட்டனிடம் ரூ.7440 கோடி உதவி கோரும் டாடா

கடந்த மார்ச் மாதம் தான் இந்த இரு கார் தயாரிப்புப் பிரிவுகளையும் போர்ட் மோட்டர்ஸ் நிறுவனத்தின் பிரிட்டிஷ் கிளையிடமிருந்து டாடா மோட்டர்ஸ் நிறுவனம் 2.3 பில்லியன் யூரோவுக்கு (ரூ. 11,000 கோடி) வாங்கியது.
ஆனால், மிக அதிக விலை கொண்ட இந்த கார்களின் விற்பனை அதிகரிக்கவில்லை. மாறாக சரிந்து கொண்டே வருகிறது. இதனால் இந்த கார் நிறுவனங்களை வாங்க டாடா நிறுவனம் வங்கிகளிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளும் படுத்துக் கிடப்பதால், அங்கும் டாடா நிறுவனத்தால் நிதி திரட்ட முடியவில்லை.
இப்போது சர்வதேச நிதி சிக்கலால் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு நிதி, வங்கி, கார், உற்பத்தித்துறை நிறுவனங்களுக்கு அரசு உதவிகளை அளித்து அவற்றைக் காப்பாற்றி வருகின்றன.
அமெரிக்க அரசும் தனது நாட்டில் திவாலாகிக் கொண்டிருக்கும் சில முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறது.
இந் நிலையில் பிரிட்டன் அரசிடம் டாடா நிறுவனமும் 1 பில்லியன் யூரோ கடனுதவி கேட்டுள்ளது. இதன் மூலம் இந்த இரு கார் தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளைக் காப்பாற்ற முடியும் என அந் நாட்டு அரசிடம் டாடா தெரிவித்துள்ளது.
டாடாவின் சார்பில் ஜாகுவார்-லேண்ட் ரோவர் தலைமை செயல் அதிகாரி டேவிட் ஸ்மித் பிரிட்டிஷ் அரசுடன் கடன் கோரி ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
டாடாவின் இந்தக் கோரிக்கையை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் ஏற்பார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications