சபரிமலையில் ரெய்ட்: மது- சிகரெட் பறிமுதல்!
பம்பை: சபரிமலை பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களில் தொடர்ச்சியாக அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏராளமான புகையிலை மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சில கடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களையும் கைப்பற்றி அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
சபரிமலை பகுதியில் உள்ள பம்பை முதல் அப்பாச்சிமேடு பகுதி வரை உள்ள கடைகள், ஹோட்டல்களில் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து இரு தினங்களாக திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் பல கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
கூடுதல் விலைக்கு பொருட்களை விற்ற கடைக்காரர்களிடம் இருந்து கடந்த இரு தினங்களாக ரூ.25,000 வரை அபராதமாக வசூலிக்கப்பட்டது. பம்பையில் ஒரு கழிப்பறையிலும் அதையொட்டியிருந்த 3 கடைகளிலும் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சிகரெட் பாக்கெட்டுகள், ஒரு பெரிய புகையிலை பண்டல் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இன்னொரு கடையில் சில மதுப் புட்டிகளைக் கைப்பற்றினர்.
பம்பையில் சில ஹோட்டல்களில் நடந்த சோதனையில் அழுகிய காய்கறிகள், மோசமான சமையல் எண்ணை ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அங்கிருந்த உணவு பொருட்களை பரிசோதனைக்காக அதிகாரிகள் எடுத்து சென்றனர். பம்பை கணபதி கோயில் அருகே இருந்த சில பிச்சைக்காரர்களையும் போலீசார் பிடித்து சென்றனர்.












Click it and Unblock the Notifications