Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் தொடர் மழைக்கு 34 பேர் பலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 5 நாட்களாக பெய்து வரும் தொடர் மழைக்கு தமிழகத்தில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை கீழ்பாக்கம் வாட்டர் டேங்க் ரோட்டில் வெங்கடேஷ் என்ற 15 வயது மாணவன் மின்சாரம் தாக்கி இறந்தார். கொடைக்கானலில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் சாந்தி (26), அவரது மகள் மகாலட்சுமி (10) ஆகியோர் உயிரிழந்தனர்.

குளிர் தாங்காமல் 2 பெண்கள் பலி:

நெல்லை செய்துங்கநல்லூரில் டெலிபோன் கேபிள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு ஆந்திராவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடில் அமைத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இதில் ஜெயம் என்பவருக்கு தொடர்ந்து பெய்து வரும் மழையால் குளிர் தாங்காமல் வலிப்பு ஏற்பட்டது. வழக்கமான மாத்திரைகளை சாப்பிட்டும் பலனில்லாததால் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதேபோல் தூத்துக்குடி பஸ் நிலையத்தில் இன்று காலை 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். இவரும் குளிர் தாங்காமல் இறந்திருக்க கூடும் என்று தெரிகிறது.

தூத்துக்குடி மாவட்டம் வடக்குகாரசேரியில் சுவர் இடிந்து விழுந்ததில் குமார் என்ற சிறுவனும், சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் வீடு இடிந்ததில் அமிர்தமணி என்ற பெண்ணும் உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் திருவந்தபுரத்தில் கழிவுநீர் கலந்த மழை தண்ணீரை குடித்த செண்பகவல்லி (52) என்ற பெண் வாந்தி-மயக்கம் ஏற்பட்டு பலியானார். கடலூர் சுத்தக்களத்தை சேர்ந்த அமல்ராஜ் என்பவர் மழைக்குட்டையில் தவறி விழுந்து இறந்தார்.

காட்டு மன்னார் கோவிலில் வீட்டு சுவர் இடிந்து ராஜாமணி என்ற பெண் பலியானார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கூவத்தூரில் பெரிய நாயகம், அவரது மனைவி அலோஷ்பவமேரி ஆகியோர் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் இறந்தனர். கள்ளக்குறிச்சி அருகே காட்டக்கொட்டாயில் வீரமணி, விஜய் ஆகியோர் வீட்டுச் சுவர் இடிந்து பலியாயினர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ரம்யா (9) என்ற சிறுமி ஓடை தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியானார்.

சிவகங்கை மாவட்டம் ராணிபட்டியில் மலைச்சாமி என்பவர் மின்சாரம் தாக்கி இழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனைபாண்டு குடியில் தங்கம்மாள் (65), கரைசேரண் பகுதியில் நைனா முகமது நாச்சியார் ஆகியோர் மின்னல் தாக்கி இறந்தனர்.

புதுச்சேரி தியாகதுருவம் அருகே மணிகண்டன் (5) என்ற சிறுவன் மழை நீர் குட்டையில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இத்தோடு தமிழ்நாட்டில் மழையால் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து விட்டது.

கீழ்பவானி வாய்க்கால் உடைந்து பயிர்கள் மூழ்கின:

இதற்கிடையே ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கூரப்பாளையம் , கீழ்பவானி வாய்க்கால் உடைந்ததால், ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

கீழ்பவானி வாய்க்காலில் 60 அடி நீளத்துக்கு திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால், வெள்ள நீர் ஊருக்குள் சீறப் பாய்ந்தது. வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளதால், கூரப்பாளையம், கதிரம்பட்டி, திருவாச்சி ஆகிய மூன்று கிராமங்கள் தண்ணீரில் மிதந்து வருகின்றன. அதே போன்று மழை காரணமாக ஈரோடு, பெருந்துறையில் சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள், கரும்பு, வாழை தோட்டங்கள் போன்றவை மழை நீரில் முழ்கியுள்ளன. இதனை கண்ட விவசாயிகள் கண்ணீர் வடித்து கதறி அழுதனர்.

பவானி சாகர் அணையிலிருந்து ஏற்கனவே பாசனத்துக்காக நீர் திறந்து விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் திடீர் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர்-தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தம்:

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையை அடுத்து, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 73.02 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,130 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக பொது பணித்துறை தெரிவித்தது.

கன மழை காரணமாக பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. தற்போது குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்படுகிறது.

கன மழை காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் பல ஹெக்டேர் விவசாய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நெய்வேலியில் மின் உற்பத்தி பாதிப்பு:

கன மழை காரணமாக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்குள் வெள்ளநீர் புகுந்ததால் அதன் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக நெய்வேலி என்.எல்.சி.யில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரியை எடுத்து வரும் கன்வேயர் பெல்ட் மழையில் நனைந்துள்ளதால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாகவும், தற்போதைய மழையால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மழை ஓய்ந்த பின்பு உடனே இப் பிரச்சனை சரி செய்யப்படும். மீண்டும் வழக்கம் போல் மின் உற்பத்தி செய்யப்படும் என்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் மின்துறை இயக்குனர் சேதுராமன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+