பஸ் ஓட்டை வழியே விழுந்து கர்ப்பிணி பலி
நெல்லை: நெல்லையில், மினி பஸ் ஒன்றில் ஏற்பட்ட துளையை அடைக்க வைக்கப்பட்ட அட்டை விழுந்து, அதன் வழியாக கர்ப்பிணிப் பெண் கீழே நழுவி விழுந்து பரிதாபமாக பலியானார்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அரியப்பபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பெரியசாமி. இவரது மனைவி சிவகொழுந்து (28). பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும், 11/2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தற்போது சிவக்கொழுந்து 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அவர்களின் 3 வயது மகள் முத்துலட்சுமிக்கு அம்மைநோய் இருந்தது. இதனால் சிவக்கொழுந்து தனது மகள் முத்துலட்சுமியை அழைத்துக்கொண்டு பாவூர்சத்திரம் ஆஸ்பத்திரிக்கு மினி பஸ்சில் புறப்பட்டார்.
பஸ் சிறிது தூரம் சென்றதும் சிவக்கொழுந்து தனது மகளை பஸ்சில் இருந்த தனது உறவினரிடம் கொடுத்து விட்டு பின்புற வாசல் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
இருக்கையின் கீழே பஸ்சின் அடிப்பகுதி உடைந்து இருந்தது. அதில் பலகை போட்டு வைக்கப்பட்டு இருந்தது. பலகையின் மீது கால் வைத்த நிலையில் சிவக்கொழுந்து உட்கார்ந்திருந்தார். சிறிது தூரம் சென்ற மினி பஸ் வேகத்தடை ஒன்றில் ஏறி இறங்கியது. அப்போது திடீரென்று அந்த பலகை உடைந்து விழுந்தது.
பலகையின் மீது கால் வைத்திருந்த சிவக்கொழுந்து கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சில் உடைந்த பகுதி வழியாக கீழே விழுந்தார். அவர் தலை மீது பஸ்சின் பின்புற சக்கரம் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே சிவக்கொழுந்து துடி துடித்து செத்தார். இதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர்.
கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications