மலை உச்சியில் இருந்து குதித்த மாணவி தப்பினார்!
திண்டுக்கல்: காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தால் மாணவி ஒருவர் 2000 அடி மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். ஆனால் புன்னகை மன்னன் படத்தில் கமல்ஹாசனை மரக்கிளை தடுத்து காப்பாற்றியது போல, இந்த மாணவியும் மரக்கிளை ஒன்றில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மகள் கலாராணி (18). இவர் ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார்.
தற்போது, கலாரணி தனியார் டியூசன் ஒன்றில் பிளஸ் டூ படித்து வருகிறார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு, டியூசன் சென்டருக்கு சென்ற கலாராணி அருகில் உள்ள ரெங்க மலைக்கு சென்று, கோயிலுக்காக எனது உயிரை காணிக்கையாக்குகிறேன் என்று கூறி கடிதம் எழுதிவைத்துவிட்டு மலை உச்சியில் இருந்து குதித்துள்ளார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரு மரக்கிளையில் சிக்கிக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் சிக்கி தொங்கினார்.
தகவல் அறிந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஒரு மரக்கிளையில் தொங்கியபடி இருந்த கலாராணியை கண்டு அவரை மீட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவி கலாராணி தற்கொலை குறித்து போலீசார் விசாரித்த போது அவருக்கும், டியூசன் சென்டரில் படிக்கும் மாணவன் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் கலாராணி வீட்டிற்கு தெரிய வந்த போது கலாராணியை கடுமையாக கண்டித்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த கலாராணி ரெங்கமலையில் 2000 அடி மலை உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து குதித்துள்ளார் என தெரியவந்தது.
ஆனால் அதிர்ஷ்டவடமாக அவர் ஒரு மரக் கிளையில் சிக்கி உயிர் பிழைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications