எஸ்.பி. வீடு எதிரே துணிகரம்-பெட்ரோல் குண்டு வீச்சு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. வீட்டுக்கு எதிரே உள்ள ஒருவரது வீட்டில் இன்று அதிகாலை ஒரு மர்ம கும்பல், பெட்ரோல் குண்டை வீசி விட்டுத் தப்பியது. இதில் அந்த வீட்டில் இருந்த நான்கு பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் பாஸ்ட் புட் கடை வைத்திருப்பவர் குமார் (40) இவரது வீடு காஞ்சிபுரம் எஸ்.பிய வீட்டுக்கு எதிரே உள்ளது. இவரது மனைவி தனலட்சுமி (30), இவர்களுக்கு சாந்தன் (12), மோனிஷ் (8) என இரு மகன்கள் உள்ளனர்.
இன்று அதிகாலை இவர்களது வீட்டுக்கு ஒரு மர்ம கும்பல் வந்தது. வீட்டின் வெளிக் கதவை உடைத்து விட்டு உள்ளே நுழைந்த அக்கும்பல், சமையலறை ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்தது.
பின்னர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குமார் குடும்பத்தினர் மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
அதன் பின்னர் அக்கும்பல் தாங்கள் வந்த காரில் ஏறித் தப்பி விட்டனர்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், வீடு தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். காயமடைந்த நிலையில் இருந்த நான்கு பேரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு நால்வரும் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
பெட்ரோல் குண்டு வீச்சில் வீட்டின் பெரும் பகுதி சேதமடைந்து விட்டது.
முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
எஸ்.பி. பெரியய்யாவின் வீட்டுக்கு எதிரே நடந்த இந்த துணிகர சம்பவத்தால் காஞ்சிபுரம் நகரில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications