தாஜ் ஹோட்டலை தகர்க்க திட்டம்-தடுத்தது 'ஆபரேசன் சைக்ளோன்'!
மும்பை: தாஜ் மகால் ஹோட்டலை தகர்த்துவிடும் முடிவில் தான் தீவிரவாதிகள் உள்ளே நுழைந்தனர் என மத்திய உளவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பொருளாதார சின்னங்களைத் தாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியா தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களை தகர்த்துவிடவும், இஸ்ரேலியர்களுக்கு பாடம் கற்பிக்கிறோம் என்ற பெயரில் நாரிமன் ஹவுசில் அதிகபட்சமான உயிர்களைப் பறிக்கவும் திட்டமிட்டனர்.
மேலும் மும்பையில் முடிந்த அளவுக்கு உயிர்ப் பலிகளை ஏற்படுத்தவே சிவாஜி டெர்மினல் ரயில் நிலையத்தில் தொடங்கி, கொலாபா காபி ஹவுஸ் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் கண்மூடித்தனமாக சுட்டனர்.
அவர்களது முக்கியத் திட்டம் தாஜ் ஹோட்டலை தரைமட்டமாக்குவது தான். அதற்குத் தேவையான அளவுக்கு அவர்களிடம் வெடிகுண்டுகள் இருந்தன.
ஆனால், அதற்கெல்லாம் கால அவகாசம் தராமல் எடுத்த எடுப்பிலேயே அவர்களை கமாண்டோக்கள் தாக்க ஆரம்பித்ததால் தான் அவர்கள் நிலை குலைந்தனர்.
பிடிபட்ட தீவிரவாதியான அஸாம் அமீர் கஸாம் அளித்த வாக்குமூலத்தில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. பாகிஸ்தானின் பரீத்கோட்டை சேர்ந்த இவன் வயது 21.
கராச்சி அருகே வைத்து தங்களுக்கு 2 வருடம் தீவிரவாதப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், இதையடுத்து ஒரு மாதம் பிரேக் தரப்பட்டு மீண்டும் அழைக்கப்பட்டதாகவும் இவன் கூறியுள்ளான்.
அப்போது மும்பையில் தாக்குதல் நடத்த வேண்டியது குறித்த ஸ்கெட்ச் தங்களுக்குத் தரப்பட்டதாகவும் அஸாம் கூறியுள்ளான்.
நியூயார்க் செப்டம்பர் 11 தாக்குதலை விட மிக பயங்கரமான தாக்குதலாக இது இருக்க வேண்டும் என திட்டமிட்டோம் என்றும் அவன் கூறியுள்ளான்.
தாஜ் ஹோட்டலில் கமாண்டோக்கள் சுட்டபோது அதில் அஸாம் காயமடைந்தான். இதையடுத்து இறந்தவன் போல நடித்த இவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல நெருங்கியபோது தான் இவன் மீது சந்தேகம் வந்தது. இவன் தீவிரவாதியாக இருக்கலாம் என்பதால் தனியே பிரிக்கப்பட்டான்.
ஆனால் முதலில் வாய் திறக்கவே மறுத்த இவன் பின்னர் தன்னுடன் வந்த தீவிரவாதிகளின் சிதிலமடைந்த உடல்களைப் பார்த்த பின் கதறியழ ஆரம்பித்துவிட்டான். என்னை காப்பாற்றுங்கள்.. சிகிச்சை அளியுங்கள் என கெஞ்ச ஆரம்பித்த இவனுக்கு சிகிச்சை தரப்பட்டது.
இப்போது மும்பை போலீசாரும், ஐபி, ரா அதிகாரிகளும் இவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவன் அளித்த தகவலின்படி மும்பையில் தாக்குதல் நடத்திய அனைத்து தீவிரவாதிகளுமே பாகிஸ்தானியர்கள் தான் என்றும் தெரியவந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானின் ஜெ.டபிள்யூ மேரியாட் ஹோட்டலை தீவிரவாதிகள் தரைமட்டமாக்கியது குறிப்பிடத்தக்கது. அதே போல தாஜ் ஹோட்டலையும் தரைமட்டமாக்குமாறு தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் ஆனால், அதைச் செய்ய குண்டுகளைப் பதிக்கும் முன் என்எஸ்ஜி படையினர் தாக்க ஆரம்பித்துவிட்டதாகவும் கூறியுள்ளான் அஸாம்.
மொத்தம் 15 கிலோ ஆர்டிஎக்ஸை தாங்கள் கொண்டு வந்ததாகவும், கடைசி மூச்சு, புல்லட் இருக்கும் வரை தாக்கிக் கொண்டே இருக்குமாறும் தங்களுக்கு சொல்லி அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளான்.
இறந்த உடல்களில் வெடிகுண்டுகள்:
இதற்கிடையே தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களில் வெடிகுண்டுகள் கட்டப்பட்டுள்ளன.
உடல்களை தூக்கினால் வெடித்து மேலும் உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் வகையில் இந்தச் செயலை தீவிரவாதிகள் செய்துள்ளனர். அவற்றை நீக்கி, வெடிக்கச் செய்து செயலிழக்க வைத்த பிறகே உடல்களை கமாண்டோக்கள் வெளியேற்றி வருகின்றனர்.
இதனால் ஹோட்டலில் இருந்து இன்னும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே உள்ளது.