பாக்.குடன் போர் நிறுத்தம் ரத்து?-எல்லையில் படைகளை குவிக்க இந்தியா முடிவு?
டெல்லி: மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, லஷ்கர் ஏ தொய்பா, ஜெய்ஷ் ஏ முகம்மத், அந் நாட்டு அரசின் பாதுகாப்பில் உள்ள தாவூத் இப்ராகிம் மற்றும் அல் கொய்தாவுக்கு தொடர்பிருப்பது தெளிவாகி வருவதையடுத்து பாகிஸ்தான் மீது சில கடும் நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி பாகிஸ்தானுடன் டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு காலவரையின்றி ரத்து செய்துவிட்டது.
மேலும் பாகிஸ்தானுடான போர் நிறுத்தத்தை ரத்து செய்யும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. போர் நிறுத்தம் ரத்து என்றால் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்தியா படைகளை குவிக்கும், தாக்குதலுக்கும் தயாராகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லையில் கடந்த 5 ஆண்டுகளாக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பின் எல்லையில் இதே போல இந்தியா படைகளைக் குவித்தது நினைவுகூறத்தக்கது. 'ஆபரேசன் பராக்கிரம்' என்ற பெயரில் அந்தப் படை குவிப்பு பாகி்ஸ்தானுக்கு பெரும் நெருக்கடி தந்தது குறிப்பிடத்தக்கது.
இதைத் தவிர பாகிஸ்தானுடனான ரயில், விமான போக்குவரத்துகளை நிறுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இப்படிப்பட்ட திட்டங்கள் ஏதும் இல்லை என வெளியுறவத்துறை மறுத்துள்ளது.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கியானி ஆகியோர் இந்தத் தாக்குதலில் தங்கள் நாட்டுக்குத் தொடர்பில்லை என்று கூறினாலும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள ஐஎஸ்ஐயின் பல்வேறு அதிகாரிகளும் தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதும், அந் நாட்டு ராணுவம் தொடர்ந்து காஷ்மீர் தீவிரவாதிகள், அல் கொய்தாவுக்கு உதவிக் கரம் நீட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications