Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவல நிலையில் என்எஸ்ஜி-ஒரு விமானம் கூட இல்லை

Subscribe to Oneindia Tamil

IAF-IL76
டெல்லி: மும்பையில் தாக்குதல் தொடங்கி 10 மணி நேரம் வரை என்எஸ்ஜி படையினர் வந்து சேரவில்லை. அவர்கள் வந்து சேர ஆன இந்தக் கால தாமதத்தைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டலிலும் ஓபராய் ஹோட்டலிலும் நரிமன் ஹவுசிலும் defencive position-களை எடுத்துக் கொண்டு தங்களது நிலையை வலுவாக்கிக் கொண்டனர்.

இந்த 10 மணி நேரம் இவர்கள் நடத்திய வெறியாட்டத்துக்கு 150க்கும் மேற்பட்ட பொது மக்கள் பலியாகிவிட்டனர்.

இந்தப் படை வர ஏன் தாமதமானது?

ராணுவம், போலீஸ், பாரா மிலிட்டரிப் படைகளில் இருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட மிகச் சிறந்த வீரர்கள் தான் என்எஸ்ஜி படையினர். உலகின் மிகச் சிறந்த கமாண்டோ வீரர்களில் இவர்களும் அடக்கம்.

மிகக் கடுமையான உடல்-மன பயிற்சிகளுக்கு உள்ளாக்கப்பட்டு எந்தவிதமான சூழ்நிலைகளிலும் மன உறுதியை இழக்காமல், பல நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் தாக்குதல் நடத்தும் திறமை படைத்த படை இது.

ஆனால், இந்தப் படைக்கு உள்ள சிக்கல்கள் ஏராளம்.

இந்தியாவின் மிகச் சிறந்த சில ஆயிரம் வீரர்களைக் கொண்ட இந்தப் படையின் தலைமையகம் டெல்லி. நாட்டின் எந்தப் பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தாலும் இவர்கள் டெல்லியில் இருந்து தான் வர வேண்டும்.

அப்படியானால், இவர்களுக்கென தனி விமானங்கள் இருக்க வேண்டும். ஆனால், அது இல்லை. விமானம் தேவைப்பட்டால் விமானப் படையிடம் தான் இவர்கள் கேட்க வேண்டும்.

மேலும் தீவிரவாத எதிர்ப்பு, விமானக் கடத்தல் தடுப்பு என்ற இரண்டே காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் படை இப்போது செய்து வரும் முக்கியமான வேலை நமது அரசியல்வாதிகளைக் காப்பது தான். இதில் சோனியா காந்தியில் ஆரம்பித்து அத்வானி, நரேந்திர மோடி, லாலு பிரசாத் யாதவ், சிவராஜ் பாட்டீல், முலாயம் சிங் யாதவ், மாயாவதி, முதல்வர் கருணாநிதி, ஏன் சுப்பிரமணியம் சுவாமி போன்றவர்கள் எல்லாம் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

(கிட்டத்தட்ட இந்தப் படையின் பாதுகாப்புக்கு இணையான பாதுகாப்பைத் தான் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கேட்கிறார்)

இவர்கள் தவிர பதவி போன பல ஊழல் பெருச்சாளி அரசியல்வாதிகளையும் இவர்கள் பாதுகாத்தாக வேண்டும்.

இதனால் இந்தப் படை எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கான காரணமே சிதைந்து போய்விட்டது. நாட்டின் முக்கியமான அரசியல்வாதிகளைக் காக்க வேண்டும் என்பதால் பெரும்பாலும் இவர்கள் டெல்லியிலேயே இருக்க வேண்டிய நிலை.

இந் நிலையில் தான் மும்பையில் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது. ஆனால், அப்போது மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் கேரளத்தில் இருந்தார். அவர் வந்து சேர 1 மணி நேரம் ஆனது.

அவர் இந்தத் தீவிரவாதத் தாக்குதலை மும்பை போலீசாரால் முறியடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டார். இதையடு்தது மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை 11 மணிக்குத் தொடர்பு கொண்டார்.

என்எஸ்ஜி வந்தால் தான் முடியும் என்றார். அவர் எவ்வளவு பேர் வேண்டும் என்று கேட்க 200 பேர் என்று மகாராஷ்டிர முதல்வர் கூறியுள்ளார்.

இதையடுத்து உள்துறைச் செயலாளரைக் கூப்பிட்டு என்எஸ்ஜி படையை மும்பைக்கு அனுப்ப பாட்டீல் உத்தரவிட, அந்தப் படையின் தலைவர் தத்தா உடனே தயார் நிலைக்கு வந்தார். தனது பாய்ஸ் 200 பேரை உடனடியாக தலைமையகத்துக்கு வரவழைத்தார்.

ஆயுதங்களை ஒருங்கிணைத்தார். மும்பைக்குப் போக விமானம் வேண்டுமே.. விமானப் படைக்கு கோரிக்கை வைக்கப்பட அவர்கள் 200 பேரும் ஆயுதங்களும் கொண்டு செல்ல ஐஎல்-76 விமானம் தான் சரி வரும் என்று கூறி அந்த விமானத்தை தயார் செய்யச் சென்றனர்.

ஆனால், அப்போது டெல்லியில் ஒரு ஐஎல்-76 கூட இல்லை. அது சண்டிகரில் இருந்தது. தூங்கிக் கொண்டிருந்த அந்த விமானத்தின் விமானிகளை வீட்டிலிருந்து வரவழைத்து அவர்கள் வந்து விமானத்தில் எரிபொருள் நிரப்பி முடித்து அதை டெலிக்குக் கொண்டு வரவே இரவு 2 மணியாகிவிட்டது.

இதையடுத்து அந்த விமானம் மும்பைக்குக் கிளம்பியது. ஆனால், இது மிக மெதுவாகப் பறக்கும் ரஷ்ய விமானம். இந்த விமானம் விமானப் படையில் சரக்குகளை, டாங்கிகள், பீரங்கிகளை ஏற்றிச் செல்ல பயன்படுவது.

ஆனால், 200 பேரையும் ஆயுதங்களையும் ஏற்றிச் செல்லும் வகையில் விமானப் படையிடம் வேறு விமானம் இல்லை. இதனால் ஐஎல்-76 தான் மிஞ்சியது. இதில் முறையான ஏசி சிஸ்டம் கூட கிடையாது என்கிறார்கள்.

இரவு 2.10 மணிக்குக் கிளம்பிய அந்த விமானம் காலை 5.25 மணிக்குத் தான் மும்பை விமான நிலையம் வந்திறங்கியது.

அங்கிருந்த பஸ்கள், வேன்களில் ஏறி தாஜ், ஓபராய் ஹோட்டல்கள், நரிமன் ஹவுசிக்கு வந்து சேர மேலும் 40 நிமிடங்கள் ஆகிவிட்டன.

அவர்கள் அந்த இடங்களை ஆராய்ந்து தாக்குதலை ஆரம்பிக்க 7 மணிக்கு மேலாகிவிட்டது. இந்த 10 நேர இடைவெளியில் முடிந்தவரை எவ்வளவு பேரை கொல்ல முடியுமோ அவ்வளவு பேரை கொன்று முடித்துவிட்டனர் தீவிரவாதிகள்.

ஒரு தாக்குதல் நடந்தால் அடுத்த 30 நிமிடத்தில் பதிலடியைத் தந்தால் இதுபோன்ற விஷயங்களில் முழு வெற்றி என்பது சாத்தியம். ஆனாலும் என்எஸ்ஜி படையினர் இத்தனைத் தடைகளையும் தாண்டி இரவு பகலாகப் போராடி தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டி மும்பையை மீட்டுள்ளனர்.

நேபாளத்திலிருந்து இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இந்தியா வழியாக ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்டபோதும் என்எஸ்ஜி வந்து சேர இப்படித்தான் பல மணி நேரமானது. அந்த விமானம் இந்தியாவைத் தாண்டி பாகிஸ்தானுக்கு மேல் பறக்க ஆரம்பித்த பின்னர் தான் என்எஸ்ஜி வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்தப் படையை நாட்டின் 4 முனைகளிலும் மத்தியப் பகுதியிலுமாக பிரித்து நிலை கொள்ளச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நாட்டின் எந்தப் பகுதியையும் இந்தப் படை 2 மணி நேரத்துக்குள் அடையும் வகையிலாவது அவர்களை நிலை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சமீபத்தில் தான் இந்தப் படை தொடர்பான சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, தேவைப்பட்டால் இந்தப் படை தனியார் விமானத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாமாம். அடேயப்பா, என்ன ஒரு சலுகை...?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+