இந்து தீவிரவாதிகள்-இஸ்ரேல் தான் காரணம்: கதைவிடும் பாக். மீடியா
டெல்லி: மும்பையில் நடந்த தாக்குதலுக்கு இந்து தீவிரவாதிகளும், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத்தும்தான் காரணம் என பாகிஸ்தான் மீடியாக்கள் கூறுகின்றன.
பாகிஸ்தான் டிவி, இணையதளம் ஒன்றை சுட்டிக் காட்டி இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
www.hotklix.com என்ற அந்த இணையதளம் பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் சையத் ஹமீத் இவ்வாறு கூறியிருப்பதாக தெரிவித்துள்ளது.
அந்த செய்தி குறித்து பாகிஸ்தானின் டிவி நிறுவனமான நியூஸ் ஒன் கூறியுள்ள செய்தியில், இந்துக்கள்தான் இந்த செயலுக்குக் காரணம் எனத் தோன்றுகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பேசிய பாஷை பாகிஸ்தானியர்களுடையது அல்ல என்று கூறியுள்ளார் ஹமீத்.
அவர் கூறுகையில், இது திட்டமிட்ட செயல். அமெரிக்கர்கள் திட்டமிட்டு செய்த செயல்தான் 9/11 தாக்குதல். அதை அவர்கள் சிறப்பாக செய்து தவறான எண்ணத்தை உருவாக்கினர். அதை மீடியாக்களும் சிறப்பாக செய்தி வெளியிட்டன. அதேபோலத்தான் இந்தியர்களும் இதுபோல செய்துள்ளனர். ஆனால் செய்வதை அவர்கள் முறையாக செய்யவில்லை, குழப்பி விட்டார்கள்.
இந்து தீவிரவாத, மதவாத அமைப்புகள்தான் இந்த செயலுக்குக் காரணம். முஸ்லீம் யாருக்கும் இதில் தொடர்பு இல்லை. தாக்குதல் நடந்த முதல் ஐந்து நிமிடங்களில் இந்து தீவிரவாதம் குறித்து விசாரணையை மேற்கொண்டிருந்த 3 ஏடிஎஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் இந்து தீவிரவாதம் குறித்த விசாரணை முடங்கிப் போய் விடும் என அவர்கள் நினைத்துள்ளனர். அதேபோல சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கும் காணாமல் போய் விடும் என அவர்கள் நினைத்து விட்டனர்.
இந்த தாக்குதல் மூலம் இந்து தீவிரவாதிகள் மீதான இந்தியாவின் கவனம் அப்படியே திரும்பி பாகிஸ்தான் தீவிரவாதிகள் பக்கம் திரும்பும் என்பது அவர்களின் கணி்ப்பு என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த மார்வி மேமன் பேசுகையில், இந்தியாவுக்கு ஐ.எஸ்.ஐ. தலைவரை அனுப்ப பாகிஸ்தான் அரசு எடுத்த முடிவு தவறானது. அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.
பாகிஸ்தானுக்கு வர வேண்டிய தண்ணீரை இந்தியா தடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், காஷ்மீர் பிரச்சினையில் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஏன் ஐ.எஸ்.ஐ. தலைவரை கேட்டவுடன் நாம் அங்கு அனுப்ப வேண்டும்.
பாகிஸ்தானுக்கு எதிராக பேசினால்தான் அவர்களுக்கு இனிப்பாக இருக்கிறது போலும்.
இந்தியாவில் உள்ள இந்து தீவிரவாதிகள் விதைத்த தீவிரவாத விதைகளை இப்போது இந்தியா அறுவடை செய்து கொண்டிருக்கிறது என்றார் மார்வி.
இதேபோல பாகிஸ்தானைச் சேர்ந்த பல்வேறு மீடியாக்களுமே இதே போல பல கதைகளைப் புணைந்துள்ளன.












Click it and Unblock the Notifications