தமிழகத்தை நெருங்கும் புயல் சின்னம்-இன்று மாலை முதல் கன மழை

வங்கக் கடலின் தென் கிழக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 900 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டனத்திற்கு கிழக்கு தென் கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவிலும் அது நிலை கொண்டுள்ளது.
இது மேலும் நகர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி மேற்கு - வடக்கு நோக்கி நகரும்.
இதன் விளைவாக இன்று இரவு முதல் இந்தப் பகுதிகளில் கன மழை பெய்யும். கூடவே மணிக்கு 70 கிலோமீட்டர் அளவில் காற்றும் வீசக் கூடும்.
நாளை மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்யும். கடல் கொந்தளித்துக் காணப்படும்.
இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குப் போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம், நாகையில் புயல் எச்சரிக்கை:
புயல் சின்னம் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், நாகை ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னம் புயலாக மாறக் கூடிய என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகமும், புதுச்சேரியும் மீண்டும் ஒரு வெள்ளக்காட்டையும், பெரும் சேதத்தையும் சந்திக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications