என்.எஸ்.ஜி. பாதுகாப்பு: அத்வானிக்கு லாலு சவால்
பாட்னா: என்.எஸ்.ஜி கமாண்டோ பாதுகாப்பு வேண்டாம் என்று பாஜக தலைவர் அத்வானி கூறினால், நானும் எனது என்.எஸ்.ஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்கிறேன் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாட்னாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்.கே.அத்வானி தனது என்.எஸ்.ஜி. பாதுகாப்பை வேண்டாம் என்று கூறினால் நானும் எனது என்.எஸ்.ஜி. பாதுகாப்பை விலக்கிக் கொள்ளத் தயார்.
பொருத்தமில்லாத தலைவர்களுக்கெல்லாம் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறுகிறார். முதலில் அவர் அத்வானியிடம் போய் இதைச் சொல்லட்டும். அவருடைய என்.எஸ்.ஜி. பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு அட்வைஸ் செய்யட்டும் என்றார் லாலு.
லாலுவின் இந்தப் பேச்சு குறித்து நிதீஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, லாலு பிரசாத் யாதவ் பேசுவதையெல்லாம் ஏன் என்னிடம் வந்து சொல்கிறீர்கள்?, எனது கருத்தைக் கேட்கிறீர்கள்?.
24 மணி நேரமும் எதையாவது மீடியாக்கள் மெல்வதற்கு கொடுத்துக் கொண்டிருப்பதுதான் லாலுவின் வேலை. அதற்கெல்லாம் நான் பதிலளிக்க முடியுமா? என்றார் கோபமாக.