தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்: பொன்சேகா திமிர் பேட்டி
கொழும்பு: தமிழகத்தில் உள்ள அரசியல் கோமாளிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இந்திய அரசு செயல்படாது என நம்புகிறேன் என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா திமிராக பேட்டி அளித்துள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்கள் அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவிக்கும் போக்கை தடுத்து நிறுத்துமாறு கோரி வருவதை அவமதிக்கும் வகையில் பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போரை நிறுத்துமாறு ஒருபோதும் இந்தியா கூறாது என நம்புகிறேன். விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கும் ஆபத்து உள்ளது.
இதை உணர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கோமாளிகளின் பேச்சை கேட்டுக் கொண்டு, இந்திய அரசு செயல்படாது என நம்புகிறேன். விடுதலைப்புலிகளை வைத்து இவர்கள் பிழைப்பு நடத்தி வருபவர்கள். இவர்களின் பேச்சை இந்திய அரசு மதிக்காது என நம்புகிறேன்.
விடுதலைப் புலிகள் இந்தியாவின் மதிப்பு மிக்க பிரதமர்களில் ஒருவரான ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ளும்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் பெருமளவில் பிரச்சினைகளைக் கொடுத்தவர்கள். எனவே இவர்களால் இந்தியாவுக்கு எந்த வகையிலும் லாபம் இருக்க முடியாது. மாறாக ஆபத்துதான் அதிகம்.
ராணுவ நடவடிக்கையின்போது உயிரிழப்பு நேரிடாமல் ராணுவம் கவனத்துடன்தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஊழல் அரசியல்வாதிகள், இலங்கை பாதுகாப்புப் படையினர் குறித்து அவதூறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டால், நெடுமாறன், வைகோ போன்ற அரசியல் கோமாளிகளுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைக்கும் வருமானம் நின்று போய் விடும் என்ற அச்சம்.
இந்த நேரத்திலாவது அவர்கள் உண்மையை உணர வேண்டும். விடுதலைப் புலிகளை காப்பாற்ற முயல்வது வீண் என்பதை அவர்கள் உணர வேண்டும். விடுதலைப் புலிகள் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளனர். இன்னும் முக்கியமாக, விடுதலைப் புலிகள் பிரச்சினை இலங்கையின் உள் விவகாரம், அதில் தலையிடுவது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகும் என்பதையும் அவர்கள் உணர் வேண்டும் என்று கூறியுள்ளார் பொன்சேகா.
முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சி
இதற்கிடையே, முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சியை நெருங்கி விட்டோம் என இலங்கை பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், டிஎப்1, 57 பிரிவு படைகள் தற்போது கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்திற்கு நெருங்கி விட்டன. கிளிநொச்சி நகருக்கு அருகே வந்து விட்டன.
சமீபத்திய மோதல்களில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அடம்பன், நிவில் ஆகிய பகுதிகளில் நேற்று பெரும் உயிரிழப்பை அவர்கள் சந்தித்துள்ளனர்.
பரந்தன், அடம்பன், மேற்கு இரணமடு, தெர்முரிக்கண்டி, கொக்குவில், கனகராயன்குளம், புளியங்களுண், வட கிழக்கு ஒலுமடு, அலம்பில் ஆகிய பகுதிகள் வழியாக ராணுவம் முன்னேறி வருகிறது என்றார்.