தீவிரவாதத்தின் மையமாக மாறியுள்ளது பாகிஸ்தான் - அத்வானி

லோக்சபாவில் இன்று நடந்த மும்பை தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு அத்வானி பேசுகையில், இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல. கடந்த பல ஆண்டுகளாக நமது நாடு ஒரு போரில் ஈடுபட்டுள்ளது. இது ஒரு போர், தீவிரவாதிகளுடன் நடக்கும் சண்டை என்று இதை கூற முடியாது. இந்த போரில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் இணைந்து நாட்டுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
ஜாதி, மதம், இனம், பிராந்தியம் கடந்து அனைத்து மக்களும் இந்தப் போரில் நாட்டுக்கு ஆதரவாக உள்ளனர்.
பாகிஸ்தானைப் போல நாம் மதவாதத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் மதச்சார்பின்மையை நம்புகிறவர்கள். பாகிஸ்தான் தீவிரவாதத்தின் மையப் புள்ளியாக மாறி விட்டது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் கூறிய அனைத்தையும் நான் ஆதரிக்கிறேன், ஏற்றுக் கொள்கிறேன்.
பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான்.
ஒரு ராணுவ கமாண்டோ நடவடிக்கையைப் போல தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது உலகம் முழுமைக்கும் செல்ல வேண்டும். இதை ஒரு போர் என்று அவர்கள் உணர வேண்டும்.
தீவிரவாதத்தை எதிர்த்து அரசு கடும் நடவடிக்கைகளை முடிவு செய்தால், அதற்கு எனது கட்சியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் முழு ஆதரவு அளிக்கும்.
பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இல்லை.
தற்போது கைது நடவடிக்கை என்று கூறி நம்மை முட்டாளாக்கப் பார்க்கிறு பாகிஸ்தான். சிலரை வெளியில் போக அனுமதிக்காமல் வீட்டோடு வைத்துள்ளனர், அவ்வளவுதான்.
பாகிஸ்தான் அரசு தடை விதித்தவுடன் தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் தங்களது பெயரை மட்டும் மாற்றிக் கொண்டு தொடர்ந்து வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன.
தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்காவின் மிகப் பெரிய பங்கு அவசியம். தீவிரவாதத்தை ஒழிப்பதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திறமையற்றது. அதனால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது. காஷ்மீர் விஷயத்திலேயே ஐ.நா. சரிவர செயல்படத் தவறி விட்டது.
மதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் தொடர்பு இல்லை. இரண்டையும் ஒன்றுபடுத்திப் பார்க்கக் கூடாது. இறைத்துவ இஸ்லாம் மதம் மரியாதைக்குரியது, மதிப்புக்குரியது. ஆனால் தீவிரவாத அமைப்புகள் போதிக்கும் இதுபோன்ற அரசியல் இஸ்லாம் அபாயகரமானது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மும்பை தாக்குதல் சம்பவத்தால் முஸ்லீம்களும் கூட மிகப் பெரும் கோபத்தில் உள்ளனர்.
தாவூத் இப்ராகிமுக்கும், இந்த சம்பவத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்துக்குமே தெரியும், தாவூத் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்று. ஆனால் தாவூத் இல்லை என்று பாகிஸ்தான் மட்டும் கூறிக் கொண்டிருக்கிறது என்றார் அத்வானி.












Click it and Unblock the Notifications