கிளிநொச்சி-புலிகள் தாக்கி 89 ராணுவத்தினர் பலி
கொழும்பு: கிளிநொச்சி அருகேமுன்னேறி வந்த இலங்கை ராணுவம் மீது விடுதலைப் புலிகள் பயங்கர பதிலடித் தாக்குதல் நடத்தியதில் 60 வீரர்கள் பலியாகியுள்ளனர்.கிளிநொச்சிக்கு மேற்கே முன்னேறி வந்த ராணுவத்தின் 57வது பிரிவினரை புலிகள் எதிர்கொண்டு தாக்கினர். இரணைமடு அருகே நடந்த தெருமுருக்கண்டி என்ற இடத்தில் நடந்த இந்த மோதலில் 60 ராணுவத்தினர் பலியாயினர்.
வடக்கச்சி, பரந்தன் ஆகிய இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே பொது மக்கள் சிக்கியுள்ளனர். ராணுவத் தாக்குதலில் இவர்களில் பலரும் படுகாயமடைந்துள்ளனர்.
அதே போல கிளிநொச்சிக்கு தெற்கே நடந்த இன்னொரு மோதலில் 29 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களது உடல்களை இன்னும் ராணுவத்தால் மீட்க முடியவில்லை.
இந்த இரு இடங்களிலும் 27 புலிகளும் பலியானதாகத் தெரிகிறது.
கிளிநொச்சியை பிடிக்க சிங்கள ராணுவம் 1 மாதத்துக்கும் மேலாக முற்றுகையிட்டுள்ளது. சுமார் 50,000 ராணுவத்தினர் 3 முனைகளில் கிளிநொச்சியை தாக்கினாலும் இன்னும் அந்தப் பகுதியை அவர்களால் நெருங்க முடியவில்லை.
இந் நிலையில் ஒரே நாளில் 89 வீரர்களை இழந்துள்ள ராணுவம் கிளிநொச்சியிலிருந்து பின் வாங்கிவிட்டது. தப்பியோடிய ராணுவத்தினர் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்களையும் விட்டுச் சென்றுள்ளனர். அவற்றை புலிகள் கைப்பற்றியுள்ளனர்.