புது வீடு-2 குழந்தைகளை நரபலி கொடுத்த தந்தை
செய்யார்: கட்டி வரும் புது வீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நலமாக வாழ்வதற்காக தான் பெற்ற இரு குழந்தைகளை கழுத்தை அறித்து கொடூரமாகக் கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெள்ளாமலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லன் (32), விவசாயி. இவருக்கும் கன்னியம்மாள் (25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரோகிணி (3) என்ற மகளும், இளங்கோ (1) என்ற மகனும் உள்ளனர்.
செல்லன் அவருக்கு சொந்தமான குடிசை வீட்டின் முன்பு காலியாக உள்ள இடத்தில் வீடு ஒன்று கட்டி வருகிறார். நேற்று காலை 10 மணியளவில் கன்னியம்மாள் அருகே உள்ள குளத்திற்கு துணி துவைக்க சென்றார்.
சிறிது நேரத்தில் செல்லன் குடிசை வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த மகன் இளங்கோ மற்றும் மகள் ரோகிணி ஆகிய இருவரின் கழுத்தை அறுத்தார். இதில் 2 குழந்தைகளும் துடிதுடித்து இறந்தனர்.
இந்த நிலையில் வெளியில் சென்று இருந்த செல்லனின் தாய் முனியம்மாள் வீட்டிற்கு வந்தபோது குடிசை வீட்டில் இருந்து செல்லன் ரத்தம் வடியும் கத்தியுடன் வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 குழந்தைகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது கண்டு கதறி அழுதார். அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு வந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்லன் கைது செய்யப்பட்டார். பெற்ற குழந்தைகளை இப்படிக் கொடூரமாகக் கொன்றதற்கு என்ன காரணம் என்று அவரிடம் போலீஸார் கேட்டபோது, கட்டிவரும் புதிய வீட்டில் நன்றாக வாழவேண்டும் என்றால் குழந்தைகளை பலி கொடுக்க வேண்டும் என்று காளி தன் மீது இறங்கி கூறியதன் பேரில் குழந்தைகள் இருவரையும் பலி கொடுத்தேன் என்று கூறியுள்ளார் செல்லன்.












Click it and Unblock the Notifications