திருமங்கலம்..புதிய கூட்டணிகள் பலத்துக்கு சோதனை களம்

கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் வரவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான ஒரு பரிசோதனைக் களமாக இந்த இடைத் தேர்தல் விளங்கவுள்ளது.
இந்தத் தேர்தலில் அதிமு கூட்டணி சார்பில் மதிமுக தான் போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால், அழகிரியின் ஆதரவுடன் களமிறங்கும் திமுக வேட்பாளரை எதிர்கொள்ள அதிமுகவே நேரடியாக மோதுவதே சரியாக இருக்கும் என நினைத்து தொகுதியை தன் வசம் எடுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
அதே போல இந்தத் தொகுதியின் வெற்றி தோல்வி மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கலாம் என்பதால், தனது வேட்பாளரை நிறுத்தி திமுகவிடம் ஒருவேளை தோற்றுவிட்டால் அது அதிமுக கூட்டணிக்கே பாதகமாக அமையலாம் எனக் கருதியே இதை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துவிட்டார் வைகோ என்கிறார்கள்.
ஆட்சியில் இருக்கும் திமுகவை, அதுவும் அழகிரியி்ன் பின்புலம் உள்ள மதுரையில் எதிர்கொள்ள மதிமுகவால் நிச்சயம் முடியாது என்பதால், சவாலை அதிமுக நேருக்கு நேர் சந்திப்பதே சரி என்று ஜெயலலிதாவும் வைகோவும் முடிவு செய்துள்ளனர்.
திமுகவுக்கு இந்தத் தேர்தலில் மிகப் பெரிய சவாலாக இருக்கப் போவது மின்வெட்டு பிரச்சனை தான் என்கிறார்கள். இலவச டிவி, ஒரு ரூபாய் அரிசி என கீ்ழ்தட்டு மக்களை மகிழ்ச்சியாகவே வைத்திருந்தது திமுக. ஆனால், மின்தடை அந்த மகி்ழ்ச்சியையும் ஒரு சேர ஒழித்துக் கட்டிவிட்டது நிச்சயமான உண்மை.
மின்வெட்டால் ஆயிரக்கணக்கான தொழில்கள் முடங்கி லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ள சூழலில் இந்தத் தேர்தல் திமுகவுக்கு ஒரு அபாயகரமான பரிசோதனை தான்.
ஒருவேளை இந்தத் தேர்தலில் திமுக வென்றுவிட்டால் அது மக்களவைத் தேர்தலிலும் அந்தக் கட்சியின் வெற்றிகளுக்கு பாதை அமைக்கலாம். தோற்றால் மக்களவைத் தேர்தலிலும் அதோ கதி தான்.
அதே போல 2004ம் ஆண்டில் ஆரம்பித்து தொடர்ந்து 3 முக்கிய தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளது அதிமுக.
கடந்த மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என தொடர் தோல்விகளை சந்தித்துள்ள ஜெயலலிதாவுக்கு கூடவே மதுரை மேற்கு தொகுதியில் இடைத் தேர்தலிலும் தோல்வியே கிடைத்தது.
இப்படி தோல்விப் பயணத்திலேயே 5 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் திருமங்கலம் இடைத் தேர்தல் ஜெயலலிதாவுக்கும் அதிமுகவுக்கும் மாபெரும் சவால்.
மின்வெட்டு பிரச்சனை உள்பட மக்களின் பிரச்சனைகளை ஜெயலலிதா எவ்வாறு கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே அதிமுகவி்ன் வெற்றி தோல்வி அமையும். வழக்கம்போல் அடுத்த கட்சியையும் அதன் தலைவர்களையும் மிகவும் கீழ்தரமாகத் தாக்கிப் பேசுவது ஜெயலலிதாவுக்கு நிச்சயம் பயன் தராது. இதை கடந்த 3 தேர்தல்களில் அவர் நடத்திய பிரச்சாரமே நிரூபித்துவிட்டது.
தேமுதிகவுக்கும் இந்தத் தேர்தல் மிக மிக முக்கியம். மதுரைக்காரரான விஜய்காந்த்துக்கு ஓரளவுக்கு செல்வாக்கும் உள்ள இடம் தான் இந்தத் தொகுதி.
திமுக, அதிமுக இடையே போட்டி மிகவும் கடுமையாக இருந்தால், இதில் விஜய்காந்த் யாருடைய ஓட்டுக்களை அதிகமாக வாருகிறாரோ அவர்களுக்கு தோல்வி ஏற்படலாம்.
அதே நேரத்தில் விஜய்காந்தால் பாதிப்பு ஏதும் இல்லை என்ற அளவுக்கு பெரிய அளவு ஓட்டு வித்தியாசத்தில் திமுகவோ அல்லது அதிமுகவோ வென்றால் அது தேமுதிகவுக்கு வரும் தேர்தலில் பெரும் சரிவை ஏற்படுத்தலாம்.
அவருடன் கூட்டணி சேர முட்டி மோதும் கட்சிகள் தூர விலகலாம். இதனால் மற்ற இரண்டு கட்சிகளை விட விஜய்காந்துக்கே இந்தத் தேர்தல் மிகப் பெரிய சோதனை. வெல்கிறாரோ இல்லையோ அவர் வாங்கும் வாக்குகள் நிச்சயம் கவனிக்கப்படும்.
இந்தத் தொகுதியில் பாமகவுக்கு எந்த செல்வாக்கும் கிடையாது. இதனால் அந்தக் கட்சி இன்னும் கூட்டணிக்கு திரும்பாதது திமுகவுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை.
இந்தத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டிய நிலை. அவர்களது கவலையெல்லாம் டெபாசிட்டை காப்பாற்றுவதாகவே இருக்குமே தவிர, நிச்சயம் வெற்றி-தோல்வி பற்றி இருக்காது.












Click it and Unblock the Notifications