தீவிரவாதிகளால் வேட்டையாடப்பட்ட தாஜ் மஹால் ஹோட்டல் 21ம் தேதி திறப்பு

நவம்பர் 26ம் தேதி மும்பைக்குள் நுழைந்த தீவிரவாதிகள், பிடித்துக் கொண்ட ஹோட்டல்களில் தாஜ் ஹோட்டலும் ஒன்று. உள்ளே புகுந்து கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்திய அவர்கள், ஹோட்டலின் உட் பகுதியை பெரும் சேதத்திற்கு ஆளாக்கினர்.3 நாட்கள் நடந்த போராட்டத்தின் இறுதியில் அனைத்துத் தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் தாஜ் ஹோட்டல் மீட்கப்பட்டது.
இதில் தாஜ் மஹால் ஹோட்டலின் உட் பகுதி பெரும் சேதத்தை சந்தித்தது. அதை ஒட்டியுள்ள தாஜ் பேலஸ் பகுதியில் பெருமளவில் சேதம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகள் அடங்கிய ஹோட்டல் மட்டும் வருகிற 21ம் தேதி திறக்கப்படவுள்ளது.
இதுகுறித்து ஹோட்டலின் நிர்வாக இயக்குநர் ரேமான்ட் பிக்சன் கூறுகையில், அதி வேகமாக சீரமைப்புப் பணிகளை முடித்துள்ளோம். இதற்குக் காரணம், அங்கு பறிபோன அப்பாவி உயிர்களுக்கும், தீவிரவாதிகளுடன் தீரமாக போராடி உயிர் நீத்த நமது கமாண்டோ படையினருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையிலும், நம்மால் எந்த பாதிப்பையும் சமாளிக்க முடியும் என்பதை தீவிரவாதிகளுக்கு நிரூபிக்கும் வகையிலும் வேகமாக பணிகளை முடித்துள்ளோம் என்றார்.
பழைய தாஜ் ஹோட்டலின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் சீரமைப்புப் பணிகள் முடியாததால் அது திறக்கப்பட நாளாகும் என்று தெரிகிறது.
கிட்டத்தட்ட 60 மணி நேரம் தாஜ் ஹோட்டல் தீவிரவாதிகளின் பிடியில் இருந்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூடு, கையெறி குண்டு வீச்சு, தீவிபத்து என ஹோட்டலே அலங்கோலப்படுத்தப்பட்டு விட்டது. இதனால் ஹோட்டலின் கட்டடத்தின் வலுவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் உட்புறம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.
தாஜ் ஹோட்டலின் ஒவ்வொரு அங்குலமும் மறு சீரமைக்கப்படும். மீண்டும் புதுப் பொலிவுடன் விரைவில் தாஜ் ஹோட்டல் திகழும் என ஹோட்டலின் உரிமையாளரும், டாடா குழுமத் தலைவருமான ரத்தன் டாடா உறுதியளித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
இதேபோல தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட இன்னொரு ஹோட்டலான டிரைடென்ட் ஹோட்டலும் டிசம்பர் 21ம் தேதி திறக்கப்படவுள்ளது.
ஆனால் பெரும் சேதத்தை சந்தித்த ஓபராய் ஹோட்டலைத் திறக்க சில மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications