தம்பியை பழிவாங்க ரயில் நிலையங்களுக்கு குண்டு மிரட்டல்?
சென்னை: நேற்று முன் தினம் இரவு சென்னை க்யூ பிரிவு போலீஸ் ஐ.ஜி சங்கர் ஜூவாலின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், சென்னை எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள் திருச்சி, மதுரை, கோவை ரயில் நிலையங்களில் இன்று காலை 9.30 மணிக்கு குண்டுகள் வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து மாநிலத்தின் அனைத்து ரயில் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. மிரட்டல் விடுக்கப்பட்ட எழும்பூர், தாம்பரம், திருச்சி, மதுரை, கோவை ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் அனைத்திலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்து.
மொபைல் போன் மூலம் மிரட்டல் அனுப்பிய நபர் குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த மொபைல் போன் தாம்பரத்தை சேர்ந்த வசந்த் என்பவருடையது தெரிய வந்தது.
அண்ணனுடையது...:
இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால், இது தனது அண்ணன் செல்வேந்திரன் என்பவருக்கு சொந்தமானது என்று வசந்த் தெரிவித்தார். எனது பெயரில் அண்ணன் தான் இந்த சிம் கார்டை வாங்கித் தந்தார். அதை இப்போது அவர் தான் பயன்படுத்தி வருகிறார் என்றார்.
தம்பி-மனைவி மீது சந்தேகத்தால் விபரீதம்?:
இதையடுத்து வசந்திடம் போலீசார் தீவிரமாக விசாரித்தபோது அவர் கூறியதாவது:
செல்வேந்திரனின் மனைவியிடம் நான் சகஜமாக பழகினேன். இதனால் அண்ணன் என் மீதும் தன் மனைவி மீதும் சந்தேகப்பட்டார். என்னை அடித்து உதைத்து விரட்டினார். அவரது மனைவியையும் தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.
என்னால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விட்டது என்று கூறி என்னை பழி வாங்காமல் விடமாட்டேன் என்று மிரட்டி வந்தார்.
இந்த நிலையில் தான் என்னை பழிவாங்குவதற்காக என் பெயரில் உள்ள சிம் கார்டு மூலம் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்றார்.
இதையடுத்து போலீசார் செல்வேந்திரனை தேடி திருச்சி சென்றனர். ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் பிடிபட்ட பிறகே வெடிகுண்டு மிரட்டலுக்கான உண்மை காரணம் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications