'புஷ்-ஷூ': பெங்களூர் ஊழியர் அப்பாவி!
பெங்களூர்: பாக்தாத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூவை வீசிய ஈராக் நிருபர் முன்டாசர் அல் ஜய்தியை ஆதரித்துப் பேசியதற்காக கைது செய்யப்பட்ட பெங்களூர் நபர் அப்பாவி என்று தெரியவந்ததையடுத்து அவரை போலீஸார் விடுவித்துவிட்டனர்.
பெங்களூர் போஸ்ச் நிறுவனத்தின் கீழ் வரும் மோட்டார் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜமீல் அகமத்.
இவர் தனது சக ஊழியர்களிடம் புஷ் மீது ஷூ வீசிய ஈராக் நிருபரைப் புகழ்ந்து பேசியுள்ளார். இதையடுத்து ஊழியர்கள் சிலர் போலீசுக்கு தகவல் தந்தனர். அவரை தீவிரவாதியகாவே சித்தரித்துவிட்டனர்.
இதையடுத்து போலீஸார் ஜமீலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், விசாரணையிலும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையிலும் அவருக்கு எந்தத் தீவிரவாத அமைப்புடனும் தொடர்பி்ல்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து அவரை பெங்களூர் போலீசார் விடுவித்தனர்.
இது குறித்து போஸ்ச் துணைத் தலைவர் சுரேஷ் கூறுகையில், ஜமீல் அகமத் கடந்த 12 ஆண்டுகளாக இங்கு பணிபுரிகிறார். சிறந்த ஊழியர், அவரைப் பற்றி யாரோ தவறாக தகவல் தந்துள்ளனர். அதற்காக அவரை போலீசார் விசாரித்தது துரதிஷ்டவசமானது. அவருக்கும் தீவிரவாதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தவறான தகவல் கொடுத்து ஒருவரை சிக்கலில் மாட்டிவிடும் இது போன்ற செயல்கள் நியாயமல்ல. யாராக இருந்தாலும் நாம் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும், மதத்தை வைத்து ஒருவரை தொல்லையில் சிக்க வைப்பது முறையல்ல என்றார்.