திருமங்கலம்: ஓ.பி. தலைமையில் அதிமுக பணிக்குழு
சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பணி்க் குழுவை அமைத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் முத்துராமலிங்கம் போட்டியிடுகிறார். அவரது பிரச்சாரத்தை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனும் இடம் பெற்றுள்ளார்.
கட்சித் தொண்டர்கள் தேர்தல் பணிக் குழுப் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் மகன் மு.கருணாநிதி:
திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கம் தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்த சொத்து மதிப்பு விபரம்:
என்னிடம் ஒரு லட்சம் ரூபாயும், மனைவியிடம் 20 ஆயிரம் ரூபாயும் கையிருப்பு உள்ளது. என் மகன் மு.கருணாநிதி பெயரில் 5,000 ரூபாய் வங்கியில் உள்ளது.
என் பெயரில் வங்கியில் 7,778 ரூபாய், மனைவி பூர்ணவள்ளி பெயரில் ஆயிரம் ரூபாய், மு.கருணாநிதி பெயரில் மோட்டார் சைக்சகிள் உள்ளன.
என்னிடம் 56 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 7 பவுன் நகை, மகள் மணிமேகலையிடம் 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், மகள் சூர்யாவிற்கு 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
கெளடா கட்சி ஆதரவு:
இதற்கிடையே இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக மதசார்பற்ற ஜனதா தளத்தின் பொதுச் செயலாளர் ஜான் மோசஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications