செல்போன்: 10 நாள் சஸ்பெண்ட்-அண்ணா பல்கலை.
சென்னை: வகுப்பறைகளில் செல்போனை பயன்படுத்தும் மாணவர்கள், 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறியுள்ளார். மீண்டும் சிக்கினால் ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுவார்களாம்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் செல்போன் கொண்டுவர தடைவிதிக்கப்பட்டது.
ஆனால் பல பெற்றோர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் எங்கள் மகன் அல்லது மகளுடன் அவசரமாக தொடர்பு கொள்ள செல்போன் தேவையாக உள்ளது. எனவே வகுப்புக்கு அப்பாற்பட்டு செல்போன் பேச அனுமதியுங்கள் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து புதிதாக பதவி ஏற்ற துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர் இனிமேல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு செல்போன் கொண்டு வரலாம். ஆனால் வகுப்பில் சுவிட்ச்' ஆப் செய்துவிட வேண்டும் என்று புதிய உத்தரவை கொண்டுவந்தார்.
இந்த உத்தரவை சில மாணவர்கள் தவறாக பயன்படுத்த தொடங்கினார்கள். இதையடுத்து இதுபோல பயன்படுத்துவோருக்கு ரூ.10 ஆயிரம் விதிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் பெற்றோர்கள் இது அதிக தொகை எங்களால் கட்டமுடியாது என்று கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து புதிய நடைமுறையை அமல்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறுகையில்,
மாணவ-மாணவிகளின் கல்வியும் ஒழுக்கமும்தான் முக்கியம். அவர்கள் கல்வியில் மேம்பாடு அடைந்து நல்ல வேலைவாய்ப்பை பெற வேண்டும். அதன்மூலம் பெற்றோர்களின் கனவு நனவாக வேண்டும். எனவே செல்போன் கட்டுப்பாட்டில் சிறிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் குரோம்பேட்டை வளாகத்தில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியிலும் பி.இ. மற்றும் எம்.இ. உள்ளிட்ட முதுகலை மாணவ-மாணவிகள் 12 ஆயிரம் பேர் படிக்கிறார்கள்.
அவர்கள் வகுப்புகளுக்கு செல்லும் முன்பாக செல்போன்களை சுவிட்ச்' ஆப் செய்ய வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் வகுப்பு நேரத்தில் செல்போனை பயன்படுத்தக் கூடாது.
திடீர் என்று ஆசிரியர்களோ அல்லது நானோ ஆய்வு செய்ய வருவோம். செல்போனை வாங்கி பார்ப்போம். ஏற்கனவே வகுப்பு நேரத்தில் பேசிவிட்டு சுவிட்ச்' ஆப் செய்திருந்தாலும் தெரிந்துவிடும்.
அவ்வாறு வகுப்பு நேரத்தில் பேசியிருந்தால் 10 நாட்கள் சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது மாணவி சஸ்பெண்ட்' செய்யப்படுவார். இதே மாணவர் மீண்டும் பிடிபட்டால் ஒருமாதம் சஸ்பெண்ட்' செய்யப்படுவார்.
இதில் எந்த வித தயக்கமும் காட்டமாட்டோம். ஒருமாதம் சஸ்பெண்ட்' என்றாலே அவர்கள் தேர்வு எழுத போதிய வருகை நாட்கள் இருக்காது. மாணவர்கள் படிப்பு சீரழிந்துவிடும். எனவே மாணவ-மாணவிகள் வகுப்பு நேரத்தில் செல்போனை சுவிட்ச்' ஆப் செய்துவிடுங்கள்.
இந்த புதிய நடைமுறை ஜனவரி 5ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. காரணம் அடுத்த செமஸ்டர் வகுப்பு அப்போதுதான் தொடங்குகிறது என்றார் அவர்.