காஞ்சி மடத்திலிருந்து புதிய தமிழ் ஆன்மீக சானல்
பெங்களூரில் நடந்த விழாவில், ஸ்ரீ சங்கரா டிவியை கர்நாடக ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் மதத் தலைவர்கள், மடாதிபதிகள், துறவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநரும், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திரரும், நமது வாழ்வில் ஆன்மீகம் மிகவும் முக்கியமானது. மதங்களைக் கடந்து ஆன்மீகம்தான் நமது வாழ்க்கைப் பாதையை தெளிவாக்குகிறது என்றனர்.
சானல் புரமோட்டரான ஹரிகிருஷ்ணா கூறுகையில், நேயர்களுக்கு சிறந்த ஆன்மீக நிகழ்ச்சிகளைக் கொடுப்பதே இந்த சானலின் நோக்கம். வயது, மொழியைக் கடந்து, நல்ல ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கான வடிகாலாக இந்த சானல் திகழும் என்றார்.
தினசரி காலை ஆன்மீக இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கும். தொடர்ந்து கோ பூஜை, சுப்ரபாதம் ஆகியவை இடம் பெறும்.
இதைத் தொடர்ந்து ஆரோக்கியம், ஜோதிடம், பஜன்கள், கர்நாடக இசை, வேதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையிலான ஆன்மீக தொடர்களும் இதில் இடம் பெறும்.
தேவி தரிசனம் என்ற நிகழ்ச்சி வயோதிகர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக தினசரி காலை இடம் பெறும். மாலையில் தேவதா தரிசனம் என்ற நிகழ்ச்சி இடம் பெறும்.
அதேபோல சஹஸ்ரநாமம், ஆரத்தி ஆகியவையும் இடம் பெறும். பல்வேறு ஆன்மீகவாதிகளின் உரைகளும் இடம் பெறும்.
குழந்தைகளுக்காக காட் டூன் ('God-toons') என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். கல்வி நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.
இதுதவிர இந்து புராணங்களில் உள்ள கதைகளை அடிப்படையாக வைத்து அனிமேஷன் தொடர்களையும் ஒளிபரப்பு செய்ய ஸ்ரீ சங்கரா டிவி உத்தேசித்துள்ளது.