திண்டுக்கல்: ஆர்எஸ்எஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஆர்.எஸ்.எஸ் அமைப்பாளர் அரிவாளால் வெட்டப்பட்டார். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
மன்னார்குடி நீடாமங்கலத்தைச் சேர்ந்த பாஸ்கர் (35) திண்டுக்கல் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளராக உள்ளார்.
இவர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார்.
இந் நிலையில் நேற்று இவர் திண்டுக்கல்லில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருந்து அருகில் உள்ள கடைக்கு வெளியே சென்றார். அப்போது அங்கு திடீரென வந்த மர்ம நபர்கள் சிலர் பாஸ்கரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
நிலை குலைந்து சரிந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் இந்த தகவல் காட்டுத் தீ போல பரவ அங்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த பஸ்கள் மீது கற்களை வீசினர். இதனால் அந்த பகுயில் கடைகள் அடைக்கப்பட்டன.
வெட்டிவிட்டு தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராம கோபாலன் கண்டனம்:
இந்த சம்பவத்திற்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திண்டுக்கல் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர், சமூக தொண்டர் பாஸ்கர் (34) நேற்று காலை 6 மணியளவில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தபோது அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு காத்துக் கொண்டிருந்த பயங்கரவாதிகள் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொலை வெறித்தாக்குதலில் பாஸ்கருடைய இடது கால் முழங்காலுக்கு கீழே துண்டாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இடது கையிலும், தோள்பட்டைக்கு அருகிலும் பலத்த வெட்டுக் காயங்கள் உள்ளன.
பாஸ்கர் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்துக்களுக்கு எங்காவது பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக சென்று முன்னின்று செயலாற்றக் கூடியவர். இந்து ஒற்றுமைப் பணி செய்யும் இவரது செயல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத சமூக விரோதிகள் இதில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
இந்து முன்னணி இந்த கொலை வெறித் தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த செயலவலை செய்த பயங்கரவாதிகளை உடனடியாக கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையை இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.
ஏற்கனவே முஸ்லிம் பயங்கரவாதத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளபட்டி நாகராசன், மாணிக்க நாடார், செயல்வராஜ் போன்றோர் பலியாகியுள்ள நிலையில் மீண்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
தமிழக முதல்வர் முஸ்லிம் பயங்கரவாத இயக்கங்களிடம் மென்மையாக நடந்து கொள்வதுதான் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
எனவே ஆர்எஸ்எஸ் அமைப்பாளர் மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதலில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடராதிருக்கவும் தமிழக முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.
இதைக் கண்டித்து இன்று மாலை சென்னை மெமோரியல் ஹால் முன்பு இந்து முன்னணியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும். இதில் பாஜக தலைவர் இல.கணேசன் மற்றும் ஆர்எஸ்எஸ், இந்து இயக்கப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications