நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இயேசு பிரான் போதித்த அன்பு, மன்னிப்பு ஆகியவற்றை இந்த நாளில் நினைவுகூர்ந்து உலகில் சமத்துவம், சகோதரத்துவம் நிலவ உறுதி பூணுவோம் என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தியில், அன்பு, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, மனிதநேயம் ஆகியவற்றை உலகிற்கு அறிவுறுத்திய இயேசுவின் பிறந்தநாள் உலகெங்கும் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளை கொண்டாடிடும் கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில், உலகத்தை ஆட்கொள்ள வந்த இயேசு பிரானின் பிறந்த நாளை கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பாஜகவின் திருநாவுக்கரசர், டாக்டர் சேதுராமன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தேமுதிக சார்பில் காரைக்குடியில், நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மக்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேக் மற்றும் பிரியாணி வழங்குகிறார்.