பாகிஸ்தான் போரை விரும்பவில்லை: கிலானி
நவ்தேரா (பாக்.): தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி நிலவவே பாகிஸ்தான் விரும்புகிறது. இந்தியா போர் புரியக் கூடாது என உலக நாடுகள் அதை அமைதிப்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் சமாதிக்கு நேற்று கிலானி சென்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களிடம் போர்த் திட்டம் எதுவும் இல்லை. அமைதியையே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் எங்கள் மீது போர் திணிக்கப்பட்டால் அதை நாங்கள் கண்டிப்பாக எதிர்கொள்வோம். பதிலடி கொடுப்போம்.
பாகிஸ்தான் மீது போர் திணிக்கப்பட்டால், ஒட்டுமொத்த நாடும், அரசியல் தலைவர்களும், ஆயுதப் படைகளும் ஒருங்கிணைந்து நின்று நாட்டைக் காப்பார்கள். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
நமது மதிப்புக்குரிய தலைவர் பெனாசிர் பூட்டோவோ, தீவிரவாதத்திற்குப் பலியானவர்தான். நமது நாடும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுதான். தீவிரவாதத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான்.
மும்பை தாக்குதல் சம்பவத்தை பாகிஸ்தான் மிகக் கடுமையான வார்த்தைகளால் கண்டித்தது. விசாரணைக்கு தேவையான முழு ஒத்துழைப்பை அளிக்கவும் தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்தது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.
இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை மேற்கொள்ளவே பாகிஸ்தான் விரும்புகிறது. பாகிஸ்தான் மண்ணை யாரும், எந்த நாடும் தவறாக பயன்படுத்த பாகிஸ்தான் அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க சர்வதேச நாடுகள் உதவ வேண்டும். இந்தியாவிடம் பேசி பதட்டத்தைக் குறைக்க அவர்கள் முன்வர வேண்டும் என்றார் கிலானி.












Click it and Unblock the Notifications