காஷ்மீர் தேர்தல்: பாக்.குக்கு சரியான பாடம் - சோனியா கருத்து
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் வெற்றிகரமாக தேர்தல் நடந்து முடிந்திருப்பது அண்டை நாட்டுக்கு புகட்டப்பட்டுள்ள சரியான பாடமாகும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இது ஜனநாயகத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் கிடைத்துள்ள வெற்றி என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 124வது ஆண்டு விழா டெல்லியில் இன்று நடந்தது. காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலந்து கொண்ட சோனியா காந்தி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த சோனியா காந்தி, இது நமது அண்டை நாட்டுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டுள்ள சரியான பாடம்.
ஆரம்பத்திலிருந்தே நான் ஜம்மு காஷ்மீரில் உரிய நேரத்தில் தேர்தல் நடைபெற வேண்டும் என கூறி வந்தேன். இப்போது தேர்தல் வெற்றிகரமாக முடிந்து, முடிவுகளும் வெளியாகிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஜம்மு காஷ்மீர் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஜனநாயக அமைப்பின் மீது அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அது மகிழ்ச்சி தருகிறது என்றார் சோனியா.
உடன் இருந்த பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், மிக அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளது, நமது ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். இது தேசிய ஒருமைப்பாட்டுக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி. எனவே நான் இதுகுறித்து மகிழ்ச்சியுடன் உள்ளேன்.
அங்கு யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அங்கு ஜனநாயகம் வென்றுள்ளது. அதுதான் முக்கியம் என்றார்.












Click it and Unblock the Notifications