ஜெ.-கெளடா ஆலோசனை: மீண்டும் 3வது அணியில் அதிமுக?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளத் தலைவருமான தேவெ கெளடா இன்று சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது தேசிய அளவில் வலுவான அணியாக 3வது அணியை மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
முன்பு ஜெயலலிதாவின் முயற்சியால் ஒரு மூன்றாவது அணி உருவாக்கப்பட்டது. ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என்றும் அதற்குப் பெயர் சூட்டப்பட்டது. இந்த அணியில் அதிமுக, தெலுங்கு தேசம், சமாஜ்வாடி, இந்திய தேசிய லோக்தளம் என சில கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக இந்த அணி உடைந்தது. அணியை உருவாக்கிய ஜெயலலிதாவே அதன் பிளவுக்கும் காரணமாக அமைந்தார்.
இந்த நிலையில் தற்போது புதிய 3வது அணியை உருவாக்கும் முயற்சியில், கம்யூனிஸ்ட் கட்சிகள் மும்முரமாக உள்ளன.
இதன் அடிப்படையில் பிராந்திய அளவில் வலுவுடன் உள்ள கட்சிகளை தங்களது கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் சேர்த்து வருகின்றன.
ஆந்திராவில் தெலுங்கு தேசம், தமிழகத்தில் அதிமுக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய முக்கியமான மூன்று கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இடதுசாரிகள் இறங்கியுள்ளனர்.
அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. தெலுங்கு தேசத்தை இழுப்பதிலும் பிரச்சினை இல்லை. அதேபோல மாயாவதியையும் கூட்டணியில் இழுக்கும் முயற்சி சாதகமான நிலையில்தான் உள்ளது.
இந்த நிலையில், தேவெ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளத்தையும் கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சியில் இடதுசாரிகள் தீவிரமாக உள்ளனர். இந்தக் கட்சிக்கு கர்நாடகத்தில் இன்னும் செல்வாக்கு முழுமையாக மங்கவில்லை என்பதால் வருகிற லோக்சபா தேர்தலில் கெளடாவின் ஆதரவையும் இடதுசாரிகள் முக்கியமாக நினைக்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று சென்னை வந்தார் கெளடா. போயஸ் தோட்ட இல்லத்திற்குச் சென்று ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
மாலை 5 மணியளவில் போயஸ் தோட்டம் வந்த அவர் சுமார் ஒன்றரை மணி நேரம் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் வெளியில் வந்த அவரிடம் செய்தியாளர்கள், என்ன பேசினீர்கள் என்று கேட்டபோது, அரசியல் நிலவம் குறித்து விரிவாக விவாதித்தோம். பாஜகவையும், காங்கிரஸையும் நாங்கள் (மதச்சார்பற்ற ஜனதாதளம்) சம தூரத்தில் வைத்துள்ளது.
இன்னும் ஒருமாதத்தில் டெல்லியில் 3வது அணியின் கூட்டம் நடைபெறும். கர்நாடகத்தில் இடைத் தேர்தல் முடிந்துள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ளது. அவை முடியட்டும். அதன் பின்னர்தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
மாயாவதியை 3வது அணியின் தலைவராக முன்னிருத்தும் விவகாரம் குறித்து ஜெயலலிதாவுடன் நான் ஆலோசிக்கவில்லை.
நாங்கள் கடந்த தேர்தலில் அதிமுகவுடன்தான் இருந்தோம். இந்த திருமங்கலம் இடைத் தேர்தலிலும் அதிமுகவுக்கே ஆதரவு தருகிறோம். லோக்சபா தேர்தலிலும் அதிமுக கூட்டணியில்தான் நீடிப்போம் என்றார் கெளடா.
3வது அணி உருவாகிறது - ஜெ.:
ஜெயலலிதா கூறுகையில், லோக்சபா தேர்தல் குறித்து இருவரும் ஆலோசித்தோம். தீவிரவாதத்தைத் தடுக்கவு்ம், அதிலிருந்து மக்களைக் காக்கவும் காங்கிரஸ் கூட்டணி அரசு தவறி விட்டது. எனவே 3வது அணியை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் எங்களது அணிதான் ஆட்சி அமைக்கும்.
தற்போது நாங்கள் திருமங்கலம் இடைத் தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். எனவே வேறு எந்த சிந்தனையும் (3வது அணி, டெல்லி கூட்டம் தொடர்பாக) இல்லை. திருமங்கலத்தில் நாங்கள் வெல்ல வேண்டும் என்பது மக்களின் விருப்பம். மக்களின் ஆதரவோடு வெற்றி பெறுவோம் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications