திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு 'அல்வா' தரும் திமுகவினர்!
மதுரை: திருமங்கலத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்கு வீடு வீடாக அல்வா பாக்கெட்டுகளைக் கொடுத்து ஓட்டு கேட்டனர்.
திருமங்கலம் தொகுதி வாக்காளர்களைக் கவரும் முயற்சியில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஒவ்வொரு தேர்தலிலும் வினோதமான உத்திகளைப் புகுத்துவது வேட்பாளர்களின் ஸ்டைல்.
இந்த வகையில் திமுகவினர் திருமங்கலத்தில் புதிய உத்தியை புகுத்தியுள்ளனர். அது அல்வா கொடுத்து ஓட்டு கேட்பது.
புத்தாண்டு தினமான நேற்று எங்களுக்கு ஓட்டு போடுங்கள் எனக் கூறி வீட்டுக்கு அரைக் கிலோ அல்வா பாக்கெட்டை வழங்கி நூதன முறையில் ஓட்டு கேட்டனர்.
நேற்று பிற்பகலில் திருமங்கலம், பானு தியேட்டர் அருகில் வீடு வீடாக சென்று இந்த அல்வா சப்ளை நடந்தது.
நத்தப்பட்டி என்ற கிராமத்திலிருந்து இந்த அல்வா தயாரிக்கப்பட்டு திருமங்கலத்திற்கு விநியோகிக்கப்படுகிறதாம்.
தமிழ்நாட்டில் அல்வா கொடுப்பது என்றால் அதற்கு வேறு அர்த்தம். இந்த நிலையில் திமுகவினர் அல்வா கொடுத்து வருவதை பிற கட்சியினர் கிண்டலடிக்கத் தொடங்கியுள்ளனர். வாக்காளர்களும் அதே 'கோணத்தில்'தான் சிந்திப்பதாக தெரிகிறது.