மைனாம்பதியே வெளியேறு!-சத்யம் ஊழியர்கள் ஆவேசம்
உலக வங்கியின் கணக்கு நிர்வாகத்தில் முறைகேடு செய்ததாக சத்யம் நிறுவனம் மீது சமீபத்தில் அந்த வங்கியே குற்றம் சாட்டியது. 8 ஆண்டுகள் வர்த்தகத் தடையும் விதித்தது.
இந் நிலையில், சத்யம் நிறுவன மோசடிகள் அம்பலமாகி, அதன் தலைவர் ராமலிங்க ராஜூவும் ராஜினாமா செய்துவிட்டார். தனக்கு பதில் ராம் மைனாம்பதியை தலைமை செயல் நிர்வாகியாக அவர் நியமித்துள்ளார்.
ஆனால் இந்த நியமனத்தை சத்யம் ஊழியர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
சத்யம் நிறுவனத்தில் பதவி வகிக்க எப்படி ராஜூ குடும்பத்துக்கு தார்மீக உரிமையில்லை. ராஜூவுக்கு இணையான குற்றத்தை மைனாம்பதியும் செய்துள்ளார். சொல்லப் போனால், உலக வங்கியுடன் ஒப்பந்தம் முறிந்து தடை, இந்த அளவு அவமானம் நேர்ந்ததற்கு இந் மைனாம்பதிதான் காரணம் என்று சத்யம் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேடாஸ் நிறுவனத்தை சத்யம் கையகப்படுத்த முயன்றதற்கு முழு காரணமாகத் திகழ்ந்தவர் மைனாம்பதிதானாம்.
இப்படிப்பட்டவரை தங்கள் இடைக்கால தலைமை நிர்வாகியாக ஏற்க முடியாது என ஊழியர்கள் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கியுள்ளனர்.
வெளிப்படையான போராட்டங்களுக்கும் தயார்படுத்தி வருகின்றனர்.