சோரன் படுதோல்வி-முதல்வர் பதவி 'போச்சு'
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி பதவியேற்றார் சிபு சோரன். இதையடுத்து ஆறு மாத காலத்திற்குள் அவர் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ. ரமேஷ் சிங் முண்டா, மாவோ தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காலியான டமர் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் சிபு சோரன் போட்டியிட்டார்.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. இதில் 9,200 வாக்குகள் வித்தியாசத்தில், ஜார்க்கண்ட் கட்சி வேட்பாளர் கோபால் கிருஷ்ண பதரிடம் தோல்வியுற்றார் சிபு சோரன்.
சோரனின் இந்தத் தோல்வியால் அவரது முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒன்றரை மாதத்திற்குள் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவரால் முதல்வர் பதவியில் நீடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.