இலங்கை துப்பாக்கிச் சூடு-பாம்பன் மீனவர் படுகாயம்
ராமேஸ்வரம்: பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர், இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். இதனால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது.
மீண்டும் தனது அட்டூழியத்தைத் தொடங்கியுள்ளது இலங்கை கடற்படை. ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் இருந்த படகுகளை சுற்றி வளைத்த கடற்படையினர் வெறித்தனமாக தாக்கியுள்ளனர்.
துப்பாக்கிகளின் பின்பகுதியால் தாக்கியதால் மீனவர்கள் சிலர் காயமடைந்தனர். பின்னர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பாம்பனைச் சேர்ந்த ஒரு மீனவர் காயமடைந்தார்.
இதைத் தொடர்ந்து இனிமேல் இந்தப் பக்கம் வரக் கூடாது என எச்சரித்து விட்டு கடற்படையினர் சென்றனர்.
இதையடுத்து தமிழக மீனவர்கள் காயமடைந்த மீனவர்களுடன் கரைக்கு விரைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக மீனவர்களிடையே பதட்டம் நிலவுகிறது.