பொதுமக்களுக்கு தீவிரவாத தடுப்புப் பயிற்சி
பெங்களூர்: பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம், பொதுமக்களுக்கு தீவிரவாதத் தடுப்பு மற்றும் தவிர்ப்புப் பயிற்சியை அளித்து வருகிறது. தீவிரவாதிகளை எதிர்த்து எப்படி போராடுவது என்பது குறித்து இந்த பயிற்சியில் சொல்லித் தரப்படுகிறது.
இஸ்ரேலிலிருந்து தருவிக்கப்பட்ட அதி நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு திட்டங்கள் மூலம் இந்த பயிற்சி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
கையெறி குண்டுகளை எப்படி சமாளிப்பது, தீவிரவாதியிடம் சிக்கிக் கொண்டால் எப்படித் தப்பிப்பது என்பது உள்ளிட்டவை குறித்து பயிற்சி வகுப்பில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
இதுகுறித்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள சாப்ட்வேர் என்ஜீனியரான லியானா இமானுவேல் கூறுகையில், ஒரு முறை நான் தெருவில் சென்று கொண்டிருந்தபோது சிலரால் தாக்கப்பட்டேன். இதனால்தான், அதுபோன்ற தாக்குதல்களிலிருந்து தப்பிக்க இந்த பயிற்சி வகுப்பு உதவுகிறது. இது எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
பெங்களூர் நகர சாலைகளில் தனியாக நடந்து செல்வது ஆபத்தானதாக மாறியுள்ளது. இப்போது இந்த வகுப்புக்கு வர ஆரம்பித்த பின்னர் அந்த பயம் எனக்குக் குறைந்துள்ளது.
எந்த ஆபத்தையும் என்னால் சந்திக்க முடியும், சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது என்கிறார்.
இந்த பயிற்சி வகுப்புக்கு ரூ. 2900 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இஸ்ரேலின் சர்வதேச கிராவ் மேகா பெடரேஷன் என்ற அமைப்புடன் பெங்களூர் தனியார் நிறுவனம் இதுதொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாம்.
இஸ்ரேல் அமைப்பு, இந்த ஒப்பந்தத்தின் கீழ், சுய பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பங்கள், குறிப்புகள், பயிற்சிகள் உள்ளிட்டவை தருகிறது.
இந்த அமைப்பு இஸ்ரேல் ராணுவம் மற்றும் போலீஸாருக்கு தற்காப்பு குறித்த பயிற்சிகளை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் தீவிரவாத தடுப்புப் பயிற்சி வகுப்புகளுக்கு பெண்கள்தான் அதிகம் வருகிறார்களாம். தீவிரவாதத்திற்கு எதிராக மட்டுமல்லாமல் ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோர், பிக் பாக்கெட் அடிப்போர் உள்ளிட்ட சமூக விரோதிகளிடமிருந்தும் இது தங்களைக் காக்க உதவும் என்கிறார்கள் அவர்கள்.