லண்டனிலிருந்து தொடரும் மிரட்டல்கள்!

கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.சிவனாண்டியின் செல்போனுக்கு நேற்று இரவு 11 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் குண்டு வெடிக்கும் என கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து கட்டுப்பாட்டு அறையை உஷார்படுத்தினார் சிவனாண்டி.
இதைத் தொடர்ந்து 3 விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் தீவர சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. விமான நிலையத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு வருவோரையும், அவரது உடமைகளையும் போலீசார் தீவிர சோதனைக்கு பின்னரே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கிறார்கள். இதனால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இதேபோன்று மதுரை, திருச்சி விமான நிலையங்களிலும் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
மதுரையில் தீவிர கண்காணிப்பு...:
மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். தற்போது வந்த மிரட்டலை தொடர்ந்து 64 மத்திய போலீசார் பாதுகாப்பு பணியில் மேற்கொள்ளப்பட்டனர்.
20க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் கண்காணிப்பில் இருந்தனர்.
விமான நிலைய சுற்றுப்புற சுவர் பகுதியிலும் போலீசார் நிறுத்தப்பட்டனர். மேலும் விமான நிலைய முதல் நுழைவு வாயில், பயணிகள் நுழைவு வாயிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டனர்.
விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
சிவனாண்டியின் போனை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது தெரியவில்லை. ஆனால் மர்ம நபர் பேசிய போன் எண் பதிவாகியுள்ளது.
அந்த தொலைபேசி எண் லண்டனை சேர்ந்தது என்பதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
லண்டனிலிருந்து 3வது மிரட்டல்...:
சமீபத்தில் சென்னையில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு குண்டு வைத்து சீர்குலைக்கப்படும் என லண்டனிலிருந்து மிரட்டல் அழைப்பு வந்தது.
இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் அலிக்கு கொலை மிரட்டல் லண்டனிலிருந்து விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் விமான நிலையங்களுக்கு லண்டனிலிருந்து மிரட்டல் வந்திருப்பது போலீஸாரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மூன்று மிரட்டல்களின் பின்னணியிலும் ஒரே நபர்தான் இருக்கிறாரா அல்லது வேறு ஏதாவது அமைப்புக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications