யாஹூ தலைமை செயலதிகாரியாக கரோல் பார்ட்ஸ் நியமனம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யாஹூ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஜெர்ரி யாங் அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து தலைமை செயலதிகாரி பதவிக்குரியவரைத் தேர்வு செய்யும் வேலை தொடங்கியது.
இந்த நிலையில் யாஹு நிறுவனத்தின் புதிய தலைமை செயலதிகாரியாக கரோல் பார்ட்ஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக யாஹூ அறிவித்துள்ளது.
இதுகுறித்து கரோல் பார்ட்ஸ் கருத்து தெரிவிக்கையில், உலகின் மிகப் பெரிய பிராண்ட் யாஹூ. சிறந்த தொழில்நுட்பம், திறமையான ஊழியர்களுடன் கூடிய கட்டமைப்பு இது. இந்த நிறுவனத்தை அடுத்த மட்டத்திற்குக் கொண்டு செல்ல ஆர்வமாக உள்ளேன்.
கடந்த ஆண்டு பல சவால்களை யாஹூ சந்தித்தது. ஆனால் வரும் ஆண்டுகளில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை யாஹூ அளிக்கும் என உறுதியளிக்கிறேன். எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பை நான் சிறப்பாக பயன்படுத்துவேன் என்றார்.
இதற்கிடையே, யாஹூ நிறுவனத் தலைவர் சூ டெக்கர் ராஜினாமா செய்துள்ளார்.
புதிய தலைமை செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கரோல் பார்ட்ஸ், ஆட்டோடெஸ்க்கின் செயல் தலைவராக 2006ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி விலகியுள்ள தலைமை செயலதிகாரி ஜெர்ரி யாங்கின் தலைமையின் கீழ் யாஹூ பல சிக்கல்களை சந்தித்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து வந்த 44 பில்லியன் டாலர் இணைப்புத் திட்டத்தை நிராகரித்தார் யாங் என்பது அதில் முக்கியமானது.












Click it and Unblock the Notifications