திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளராக அழகிரி நியமனம்
சென்னை: இதுவரை பதவியே இல்லாமல் செயல்பட்டு வந்த முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமங்கலத்தில் நடந்த இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் லதா அதியமான் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்குக் காரணமான திமுக தேர்தல் பணிக்குழுத் தலைவரான அழகிரிக்கு திமுக வட்டாரத்தில் செல்வாக்கு கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னைக்கு அழகிரி தலைமையில் வந்த வேட்பாளர் லதா அதியமான் வரவேற்பு கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, காத்திரு அழகிரி, கழகத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பு உனக்கு தரப்படும். பேராசிரியருடன் (பொதுச் செயலாளர் அன்பழகன்) கலந்து பேசி அறிவிப்பு வரும் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளராக மு.க.அழகிரி நியமிக்கப்படுதாக அறிவித்தார்.
தென் தமிழக திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான எஸ்.எஸ்.தென்னரசு முன்பு இந்தப் பதவியை வகித்தவர் ஆவார். தற்போது அழகிரிக்கு இப்பதவி கிடைத்துள்ளது.
இதன் மூலம் திமுகவில் முதல் முறையாக பதவியைப் பெற்றுள்ளார் அழகிரி. அழகிரிக்கு பதவி கிடைத்ததை அவரது ஆதரவாளர்களும், திமுகவினரும், மதுரையில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர்.
பதவி கிடைத்த அறிவிப்பைத் தொடர்ந்து மு.க.அழகிரி தனது மனைவி காந்தி அழகிரியுடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்தும், ஆசியும் பெற்றார். அதேபோல பொதுச் செயலாளர் அன்பழகனையும் சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தலைவர் சொன்னதைச் செய்பவர். கட்சியில் எனக்குப் பொறுப்பு வழங்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி தந்திருக்கிறார்.
இந்தப் பதவி எனக்கு திருப்தி தருகிறது. ஏற்கனவே கட்சிக்காக கடுமையாக உழைத்து வருகிறேன். இனி இன்னும் கூடுதலாக பணியாற்றுவேன்.
கட்சிக்காக பாடுபடுவேன் என்ற நம்பிக்கையில் தலைவர் இப்பொறுப்பைக் கொடுத்துள்ளார். அந்த நம்பிக்கை வீண் போகாது. தென் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை செய்வேன் என்றார்.
இதுவரை பதவியே இல்லாமல் செயல்பட்டு வந்த அழகிரிக்கு, சக்தி வாய்ந்த பதவி தரப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.