திருவண்ணாமலை: சாமியார் கொலை-3 பேர் கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சாமியார் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் துர்வாசர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு எதிர் புறத்தில் 45 வயது மதிக்கத்தக்க சாமியார் ஒருவர் மரத்தில் பிணமாக தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரது உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் காணப்பட்டன. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் பிணத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், சாமியார் தலையில் கல்லால் அடித்து கொலை செய்து அவரது காவி வேட்டியிலேயே கழுத்தில் கட்டி மரத்தில் தொங்க விடப்பட்டது தெரிய வந்தது.
அவரது பிணம் தொங்கிய இடத்திற்கு அருகே ரத்தக் கறை படிந்த கற்களும், காலி மதுபான பாட்டில்களும் கிடந்தன.
கொலை செய்யப்பட்டவர் கிரிவலப்பாதையில் அண்ணாமலையார் பாதம் உள்ள இடத்தில் தங்கி இருந்த சாமியார் அனந்தகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியாரை கல்லால் அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டதாக திருவண்ணாமலை அடுத்த ஆணாய்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த மேஸ்திரி குமார் (30), சங்கர் (27), சங்கரின் மனைவி சந்தியா ஆகியோரைக் கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.