மங்களூர் ஹோட்டலில் பெண்கள் மீது தாக்குதல் - விசாரணைக் கமிஷன் அமைப்பு
டெல்லி: மங்களூரில் ஹோட்டல் ஒன்றில் புகுந்து அங்கு நடனமாடிக் கொண்டிருந்த பெண்களை வெறித்தனமாக தாக்கிய சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் அடங்கிய விசாரணைக் கமிஷனை தேசிய மகளிர் ஆணையம் நியமித்துள்ளது.
மங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சனிக்கிழமை இரவு ஸ்ரீராம் சேனா என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்று அங்கு பப்பில் நடனமாடிக் கொண்டிருந்த பெண்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.
ஓட ஓட விரட்டி தாக்கியதில் சில பெண்கள் காயமடைந்தனர். இந்த வெறிச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தற்போது தலையிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் அடங்கிய விசாரணைக் கமிஷனை தேசிய மகளிர் ஆணையம் நியமித்துள்ளது.
ஸ்ரீராம் சேனா துணைத் தலைவர் கைது
இதற்கிடையே, இந்த வழக்கில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் துணைத் தலைவரான பிரசாத் அட்டவார் உள்ளிட்ட மேலும் 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களையும் சேர்த்து இதுவரை 27 பேர் கைதாகியுள்ளனர்.
அட்டவார் கைதைக் கண்டித்து மங்களூர் அருகே உள்ள ஆல்பே நகரில் சிலர் பஸ்கள் மீது கல்வீசித் தாக்கினர். ஒரு லாரி தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இருப்பினும் இதில் யாரும் காயமடையவில்லை.
மங்களூர் வன்முறை தொடர்பாக ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த முக்கியப் புள்ளியான தினகர் ஷெட்டி என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.