ஜல்லிக்கட்டு நடத்த பிப். 13 வரை சுப்ரீம் கோர்ட் தடை
தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டுக்கு கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தடை விதிக்கப்பட்டது.
இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்புகிளம்பியது. பின்னர் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அளித்த உறுதிமொழிகளைத் தொடர்ந்து இந்தத் தடையை நீக்கியது உச்சநீதிமன்றம். மேலும், சில கட்டுப்பாடுகளையும் விதித்தது.
அதன்படி கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த ஆண்டும், பொங்கல் திருவிழாவின்போது அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டன.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று கோரி பிராணிகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தது.
அந்த மனு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், பிப்ரவரி 13ம் தேதி வரை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.
பி்ப்ரவரி 13ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது தமிழக அரசின் சார்பி்ல் விளக்க மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக பிராணிகள் நல வாரியம் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜல்லிக்கட்டுக்கு இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். 1600 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவி்க்கப்பட்டிருந்தது.