லோக்சபா தேர்தல்: 6 சீட் கேட்கிறது இந்திய கம்யூனிஸ்ட்
சென்னை: பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் வட சென்னை, திருப்பூர் உள்ளிட்ட 6 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஜெயலலிதாவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது.
இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறுகையில்,
தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள 6 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம்.
இத்தொகுதிகளின் பட்டியல் விரைவில் கூட்டணி கட்சி தலைவரான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட உள்ளது என்றார்.
அக்கட்சியினர் முன்னதாக நடந்த தேர்தலில் தாங்கள் வென்ற தொகுதிகளில் போட்டியிடவே அதிகம் விரும்புகின்றனர்.
தற்போதைய மாநிலச் செயலர் தா.பாண்டியன் இருமுறை வெற்றி பெற்ற வட சென்னை, நாகப்பட்டினம், கடந்த தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்ற தென்காசி, திருப்பூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் போட்டியிட ஆர்வமாக இருக்கிறது.
தற்போது கோவை தொகுதி திருப்பூர் மற்றும் கோவை என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த திருப்பூர் தொகுதியில் போட்டியிட அக்கட்சியினர் விருப்பம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அதிமுக இவர்களின் கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளுமா என தெரியவில்லை. என்றாலும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 3 தொகுதிகளையாவது குறைந்தபட்சம் பெற்றுவிட வேண்டும் என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது.