அண்ணா நினைவு நாள் - நினைவிடத்தில் கருணாநிதி, தலைவர்கள் அஞ்சலி
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 40வது நினைவு தினத்தையொட்டி இன்று காலை அவரது நினைவிடத்தில் முதல்வர் கருணாநிதி அஞ்சலி செலுத்தினார். அதேபோல அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
பேரறிஞர் அண்ணாவின் 40வது நினைவு தினம் இன்று. இதையொட்டி இன்று அவரது நினைவிடத்தில் முதல்வர் கருணாநிதி திமுக தலைவர்கள், தொண்டர்கள் புடை சூழ சென்று அஞ்சலி செலுத்தினார்.
உடல் நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஓய்வில் இருந்து வருகிறார் முதல்வர். இருப்பினும், அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும், திமுக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று உறுதியாக கூறியதால், டாக்டர்கள் அவரை அனுமதித்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை கருணாநிதி சிறப்பு ஆம்புலன்ஸ் வேன் மூலம் அண்ணா சமாதிக்கு 8.35 மணிக்கு வந்தார். அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர் ராசா ஆகியோர் வந்தனர்
முன்னதாக அமைச்சர் அன்பழகன் தலைமையில், சேப்பாக்கம் எம்.எல்.ஏ அலுவலகத்திலிருந்து அண்ணா நினைவிடம் வரை மெளனப் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தலைவர்கள் அஞ்சலி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சார்பில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ். ஷேக் தாவூத், மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் இசக்கிமுத்து உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
தேமுதிக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அண்ணா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications