சென்னையில் வியாபாரி தீக்குளித்து மரணம் - ஈழத் தமிழர்களுக்காகவா?
சென்னை: சென்னையில் கோழி வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றிiர் நெடுஞ்சாலையில் சுங்க சாவடி பஸ் நிலையம் உள்ளது. இதன் எதிரே எடை மேடை இருக்கிறது. அதன் அருகே பருப்பு கடை ஒன்றும், பக்கத்தில் காலி இடமும் உள்ளது. அங்கு மாட்டு வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
நேற்று மாலை 6 மணி அளவில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடி முதியவர் ஒருவர் ஓடி வந்தார். வலி தாங்காமல் கூச்சல் போட்டபடியே, எடை மேடை அருகே சுருண்டு விழுந்தார்.
இதைப் பார்த்து அருகே உள்ள போலீஸ் பூத்தில் இருந்த போலீசாரும், அங்கு நின்றிருந்த பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் முதியவரின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அந்தப் பெரியவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக அந்த முதியவர் தீக்குளித்து விட்டதாக செய்தி பர வியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளித்து இறந்தவரின் பெயர் அமரேசன். அவருக்கு 65 வயதாகிறது. வண்ணாரப்பேட்டையில் கோழிக்கடை வைத்துள்ளார். வீடு, நமச்சிவாயம் தெருவில் உள்ளது. இவருக்கு வசந்தா என்ற மனைவியும், வெங்கடேசன், சங்கர் என்ற 2 மகன்கள், மீரா, அருள்ஜோதி என்ற 2 மகள்களும் உள்ளனர்.
தனது தந்தையின் மரணம் குறித்து சங்கர் கூறுகையில்,
எங்களது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம். 30 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை சென்னை வந்தார். அவருக்கு ஆஸ்துமா பிரச்சினை உண்டு. இதனால் சிகிச்சை பெறறு வந்தார்.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்குப் போய்விட்டு வருவதாக கூறி வெளியில் சென்றார். இந்த நிலையில்தான் அவர் தீக்குளித்து இறந்த செய்தி எங்களுக்குக் கிடைத்தது.
எதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் எனது தந்தை இலங்கை பிரச்சினைக்காகவே தீக்குளித்து இறந்ததாக சொல்கிறார்கள்.
கடந்த சில நாட்களாகவே இலங்கைப் பிரச்சினை தொடர்பாகவும், இலங்கையில் தமிழர்கள் படும் அவதி கண்டும் மன வேதனையுடன் இருந்து வந்தார் என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், போலீஸார் உண்மையை மறைப்பதாக கூறி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் உடனடியாக விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
இதற்கிடையே, அமரேசன் தற்கொலை குறித்த தகவல் கேள்விப்பட்டு மதிமுக, பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் பெருமளவில் ஸ்டான்லி மருத்துவமனை முன்பு குவிந்தனர். போலீஸார் உண்மையை மறைக்க முயலக் கூடாது என்று கூறி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஆனால் போலீஸார், இலங்கைப் பிரச்சினைக்காக முதியவர் அமரேசன் தற்கொலை செய்யவில்லை. அவர் தீக்குளித்த போது, கோஷம் எதுவும் போடவில்லை. இலங்கை பிரச்சினை தொடர்பாக துண்டு நோட்டீசுகள் எதுவும் அந்த இடத்தில் சிக்கவில்லை. இறந்து போனவர் எதற்காக தீக்குளித்தார் என்பது பற்றி வாக்குமூலம் எதுவும் கொடுக்கவும் இல்லை. இதுபற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று கூறுகின்றனர்.