நிதி அமைப்புகளுக்கு சிறப்பு ரெபோ விகிதத்தில் ரிசர்வ் வங்கி நிதியுதவி
இதுகுறித்து ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளதாவது:
வங்கிகள் அல்லாத நிதி அமைப்புகளின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு சிறப்பு வட்டிவிகிதத் திட்டம் கடந்த அக்டோபர் 14ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி ரூ.20,000 கோடிவரை நிதி அமைப்புகளுக்கு சிறப்பு வட்டியில் கடன் வழங்கப்பட்டு வந்தது.
இப்போது சிறப்புச் சலுகையாக ரூ.59,020 கோடிக்கு நிதி வசதிகளை வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு வசதி நிதி அமைப்புகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த தொகை சிறப்பு வட்டி விகிதத்தில் ஏல முறையில் வழங்கப்படும்.
இதன் மூலம் வங்கி அல்லாத நிதி அமைப்புகளின் நிதி ஆதாரம் வலுப்படும். மேலும் அதிக பணப் புழக்கமும், நுகர்வோர் பயன்பாடு மூலம் பொருளாதார நடவடிக்கைகள் உத்வேகம் பெறவும் இது உதவும், என்று கூறப்பட்டுள்ளது.
வெளிச் சந்தையிலிருந்து நிதி திரட்டலாம்:
அதேபோல அரசும் வங்கிகளும் வெளிச் சந்தையிலிருந்து நிதி ஆதாங்களைத் திரட்ட ரிசர்வ் வங்கி தாராளமாக அனுமதிக்கும் என்று அதன் துணை கவர்னர் ஷியாமளா கோபிநாத் தெரிவித்துள்ளார். இதற்காக ரிசர்வ் வங்கி வசமுள்ள அரசுப் பத்திரங்களை தனியார் வசமாக்கவும் ரிசர்வ் வங்கி அனுமதிக்கும் என்றார்.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புகள் வங்கிகள் அல்லாத நிதி அமைப்புகளுக்கு இது மிகப் பெரிய சலுகையாகக் கருதப்படுகிறது.