சென்னையில் இன்றும் ஒரு பெண் கொலை
சென்னை: சென்னையில் மேலும் ஒரு பெண் கொடூரமாகக் கொல்லப்பட்டு, அவரது காதை அறுத்து, அவர் அணிந்திருந்த இரு தோடுகளையும் கொலைகாரர்கள் அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர்.
சென்னை நகரில் கடந்த சில மாதங்களாக தனியாக வீட்டில் இருக்கும் பெண்களைக் கொல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் வயது முதிர்ந்த தம்பதி சென்னை சைதாப்பேட்டையில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில், இன்று காலை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த தோடுகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். தோடுகளை எடுப்பதற்காக அந்தப் பெண்ணின் காதுகளையும் கொடூரமாக அறுத்து எடுத்துள்ளனர் அந்த பாதகர்கள்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பூந்தமல்லி சாலையில் வசித்தவர் சண்முகம். இவரது மனைவி சாந்தா (50). சண்முகம் போரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். பின்னர் பேப்ரிகேஷன் கம்பெனியிலும் பணியாற்றி வந்தார்.
ஒரு மாதத்திற்கு முன்பு சண்முகம் இறந்துவிட்டார். சண்முகம், சாந்தா தம்பதியினருக்கு விஜயா, சுமித்ரா, ரேவதி, மீனா, அனுப்பிரியா ஆகிய 5 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
விஜயாவும், சுமித்ராவும் குரோம்பேட்டையில் வசிக்கின்றனர். ரேவதி செங்கல்பட்டில் கணவருடன் வசித்து வருகிறார். 4வது மகள் மீனா தாய் வீட்டிலேயே கீழ் தளத்தில் தனது கணவருடன் வசித்து வருகிறார். கடைசி மகள் அனுப்பிரியா ஜாபர்கான் பேட்டையில் வசித்து வருகிறார்.
இவர்களுக்கு ஒரு கடையும், 4 வீடுகளும் சொந்தமாக உள்ளன. மாடியில் உள்ள வீட்டில் சாந்தா தனியாக வசித்து வந்தார்.
நேற்று இரவு சாந்தா, மகள் மீனா வீட்டில் சாப்பிட்டு விட்டு மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று தூங்கிவிட்டார். இன்று காலை 6.30 மணி அளவில் அம்மாவுக்கு காபி கொடுப்பதற்காக அவரை எழுப்புவதற்கு மாடிக்கு சென்றுள்ளார் மீனா.
அங்கு அவர் கண்ட காட்சி அவரை தூக்கி வாரிப் போட்டது. சாந்தா, ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. நெற்றியிலும் காயம் இருந்தது. மேலும் அவரது 2 காதுகளும் அறுக்கப்பட்டு அதிலிருந்த தோடுகளும் களவாடப்பட்டு இருந்தன.
அலறி அடித்து கீழே இறங்கி வந்த மீனா போட்ட கூச்சலில், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். மீனாவின் சகோதரிகளுக்குத் தகவல் போய் அவர்களும் விரைந்து வந்தனர்.
சாந்தா கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் அதிகாரிகளும், போலீஸாரும் அங்கு விரைந்து வந்தனர். மோப்ப நாய் புருனோ சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. கொலையான இடத்திலிருந்து அதே தெருவில் உள்ள ஒயின் ஷாப் வரை ஓடி மீண்டும் திரும்பி அந்த வீட்டிற்கு வந்து நின்றது. தடவியல் அறிஞர்களும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து ரேகைகளையும் தடயங்களையும் சேகரித்தனர்.
கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த வீடு உள்ள பகுதி போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்தப் பகுதியில் கொலை நடந்துள்ளது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் நகைக்காகவே இந்தக் கொலை நடந்திருக்கும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.