25ம் தேதி சரத்குமார் டெல்லியில் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகிற 25ம் தேதி டெல்லியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் ஆசைத்தம்பி இல்லத்திருமண விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு சரத்குமார் பேசுகையில்,
இலங்கை தமிழர் பிரச்சினையை கொண்டு பலர் அரசியல் லாபம் அடைகின்றனர். ஆனால் சமத்துவ மக்கள் கட்சி லாபத்திற்காக செய்வதில்லை. இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக உறுதியான போராட்டங்களை நடத்தி வருகிறது.
கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் ஒரு மனு கொடுத்தேன். அப்போது இருந்த சூழ்நிலையில் அவர் அந்த மனுவை படிக்கவில்லை. அதில் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சருக்கு நல்ல பெயர் ஏற்படுத்தும் விதமாக அந்த மனுவில் எழுதியிருந்தேன்.
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக தி.மு.க. அரசு போராடியதாக தமிழக முதல்வர் புள்ளி விவரங்களை அளித்துவருகிறார். தமிழர் உணர்வு உள்ள அனைவரும் இலங்கை தமிழர்களுக்காக போராடி வருகின்றனர்.
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர். அது நடந்ததா? இல்லை. இலங்கை தமிழர் போரை நிறுத்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றார். அங்கு அவர் என்ன பேசினார் என்பது இதுவரை தெரியவில்லை.
டெல்லியில் ஆர்ப்பாட்டம் - திருச்சியில் பொதுக்கூட்டம்
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திய அளவில் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வருகிற 25-ந் தேதி டெல்லியில் பாராளுமன்றம் அருகே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதைத்தொடர்ந்து 7-ந் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்.
பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலை என்பது மக்களின் நிலை. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தற்போது உள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் மாற்றம் ஏற்படாது. இது தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்களை அழைத்து கலந்தாய்வு செய்துவருகிறோம்.
மார்ச் 10ல் கூட்டணி குறித்து முடிவு
கூட்டணி குறித்து மார்ச் 10-ந் தேதி அளவில் அறிவிக்கப்படும். மத்தியில் ரெயில்வேக்கு தனி பட்ஜெட் போடுவதுபோல் தமிழகத்தில் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடவேண்டும். சாதி, மதம், ஏற்றத்தாழ்வு இல்லாத மக்களை உருவாக்க சமத்துவ மக்கள் கட்சி இறுதி மூச்சு உள்ளவரை போராடும் என்றார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications