வரதட்சணை தந்த பெண்ணின் தந்தை மீது வழக்கு
மானாமதுரை: மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணை கொடுத்ததாக மணப்பெண்ணின் தந்தை மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை அருகே இடைய மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் கனிமொழி (25). இவருக்கும் மானாமதுரை சோம சுந்தரம் காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருளாழி என்பவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அப்போது மணமகனுக்கு ஒரு லட்சம் ரொக்கபணம், 45 பவுன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட் கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
இதற்கிடையில் 2008ம் ஆண்டு கூடுதலாக ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக மானாமதுரை போலீஸ் நிலையத்தில் கனிமொழி புகார் செய்தார்.
அதன் பேரில் அருளாழி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருமணத்தின்போது வரதட்சணை கொடுத்ததாக சுப்பிரமணியன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில், பெண்ணின் தந்தை மீது வழக்கு வரதட்சணை கொடுப்பது குற்றம் என்பதால் அதன் அடிப்படையில் சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மானாமதுரை கோர்ட்டில் ஆறுமுகம் மனு செய்தார்.
இதையடுத்து நீதிபதி ரவி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கலாவதி விசாரணை நடத்தி வரதட்சணை கொடுத்ததாக சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.