குடிகார ஜப்பான் நிதியமைச்சர் ராஜினாமா
சமீபத்தில் இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-7 (அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி) நாடுகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜப்பான் சார்பில் நிதி அமைச்சர் சோய்சி நாககவா கலந்து கொண்டார்.
கூட்டத்துக்கு முன்னதாக இவர் நன்றாக மூக்குமுட்ட குடித்துள்ளார். இதையடுத்து கூட்டத்தில் பேசுவதற்கு மிகவும் தடுமாறியுள்ளார். அவருக்கு நாக்கு குழறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருக்கையில் அமர்ந்த அவருக்கு தூக்கம் கண்ணை கட்டியுள்ளது. முழித்தும் முழிக்காமலும் ஒரு வழியாக கூட்டம் முடியும் வரை சமாளித்துள்ளார்.
இந்த செய்தி ஜப்பானில் பரவ அவருக்கு கூட்டணி மற்றும் எதிர்கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டணி கட்சியான புதிய கோமிடோ கட்சியின் ஆதரவில்லாமல் ஆட்சியில் நீடிக்க முடியாது என்பதால் நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா அவர் விரைவில் செய்ய இருக்கிறார்.
இந்நிலையில் சோய்சி நாககவா கூறுகையில்,
ஜப்பான் மக்களுக்கு பெருத்த சிக்கலை ஏற்படுத்திவிட்டேன். நான் ஜலதோஷத்துக்கான மருந்துகளை எடுத்து கொண்டேன். அம்மருந்து காரணமாக கூட்டத்தில் என்னால் கவனமாக செயல்பட முடியவில்லை.
தவறான மருந்து எடுத்து கொண்டதற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தவுடன் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்றார் நாககவா.