வக்கீல் சங்கங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: அடிக்கடி நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபடுவது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு வக்கீல் சங்கங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனப் பேராசிரியரும், வழக்கறிஞருமான ஆர்.முரளீதர் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் தாக்கப்படுவது குறித்து அக்கறை கொள்ள வேண்டும். ஆனால், அதேசமயம், நீதிமன்றத்தைப் புறக்கணிப்பதற்கு நியாயம் கற்பிக்க முடியாது.
நீதிமன்றப் புறக்கணிப்பால் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதுடன், வழக்கு தொடுப்பவர்களின் மனித உரிமைகளும் மீறப்படுகின்றன.
எனவே இதுபோன்ற நீதிமன்றப் புறக்கணிப்பை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு தொடர்பாக விளக்கம் அளி்க்குமாறு கூறி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், சென்னை பார் அசோசியேஷன், தமிழ்நாடு பார் கவுன்சில், சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர், இந்திய பார் கவுன்சில் ஆகியவற்றுக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பின்னர் வழக்கு விசாரணை வருகிற 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.